கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டுமா? பிரதமர் மோதி ஆலோசனை

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து இன்று (ஏப்ரல் 8) காலை அனைத்து மாநில எம்பி-க்களுடனும் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை நடத்தினார்.

அப்போது 'சமூக அவரசநிலை' சூழலில் இந்தியா உள்ளதாகவும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், அந்த ஆலோசனையில் பிரதமர் மோதி பேசியதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் வல்லுநர்கள் என பலரும் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதாகவும் மோதி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 11ஆம் தேதியன்று அனைத்து மாநில முதலமைச்சர்களையும் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோதி சந்திக்கவுள்ளார் என ஏஎன்ஐ செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்வீட் செய்துள்ள பிரதமர் மோதி, "எனக்கு மரியாதை செலுத்துவதற்காக மக்கள் 5 நிமிடங்களுக்கு நிற்க வேண்டும் என்று ஏதோ பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக எனக்கு தெரிய வந்துள்ளது. முதலில் என்னை யாரோ பிரச்சனையில் மாட்டிவிட இவ்வாறான கருத்துகளை பரப்புகிறார்கள் என்று தோன்றியது. ஆனால், அது யாரேனும் உண்மையிலேயே என் நல்லதுக்காக நினைத்திருக்கலாம். எனினும், என் மீது உங்களுக்கு அன்பு இருந்து, எனக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால், இந்த கொரோனா தொற்று முடியும் வரையிலாவது ஒரு ஏழை குடும்பத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். அதைவிட எனக்கு பெரிய மரியாதை ஏதும் இருக்காது" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 773 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் மொத்தம் 149 பேர் உயிரிழந்துள்ளனர் அதில் நேற்று மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை அமைச்சகத்தின் துணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்

மேலும் இந்தியாவில் ஹைட்ரோக்ஸிகுளோரோகுவின் மருந்துக்கு இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி எந்த தட்டுப்பாடும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1018ஆக உள்ளது. 690 மற்றும் 576 எனும் எண்ணிக்கையுடன் தமிழகம் மற்றும் டெல்லி ஆகியவை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஊரடங்கை நீட்டிக்கக் கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுத தமது அரசு தயாராக இருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரி இருந்தார்.

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் கேட்டுக்கொண்டதை அடுத்து, இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

கொரோனா பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான இன்சுரன்ஸ் வழங்க இருக்கிறது உத்தர பிரதேச அரசு.

கொரோன வைரஸ் தொடர்பான பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படுவது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரங்கேறி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் குறித்த தகவலை சேகரித்துக் கொண்டிருந்த ஆஷா (அங்கீகரிக்கப்பட்ட சுகாதார செயற்பாட்டாளர்) பணியாளர் பீனா யாதவ் தாக்கப்பட்டிருக்கிறார்.

முஸ்லிம்களால் மன்னிப்பின் இரவாக அனுசரிக்கப்படும் ஷபே பராஅத் இன்றிரவு (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ஊரடங்கு உத்தரவை மீறி முஸ்லிம் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுபோல அலிகர் தலைமை உலாமாவும் யாரும் பள்ளிவாசலில் கூட வேண்டாம் என கோரி உள்ளார்.

முடக்கநிலையை ஜூன் 30ம் தேதி வரை நீடிக்க கேரளா அரசாங்கம் பரிந்துரை

இதற்கிடையே, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள், நாட்டை முடக்குவதை நீட்டிக்க கோரி பரிந்துரைத்துள்ளனர். ஆனால் படிப்படியாக, மிகவும் பொறுமையாகவே இந்த முடக்கத்தை குறைக்க வேண்டும் என கேரள அரசு பரிந்துரைத்துள்ளது. இது மட்டுமின்றி ஜூன் 30ம் தேதி வரை இந்த முடக்கநிலை தொடர வேண்டும் என மத்திய அரசாங்கத்திற்கு கேரளா பரிந்துரைத்துள்ளது.

மேலும் ஜூன் 30ம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக எதிர்பார்த்த அளவு குறையாவிட்டால் மூன்று கட்டங்களாக சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் கேரள அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

பொது போக்குவரத்து, திருமணங்களுக்காக பயணிக்கும் வாகனங்கள், கார், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதிகள் முடக்கப்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் மக்கள் அனைவரும் கட்டாயம் முக மூடி அணிய வேண்டும். பல இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும், உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை ஜூன் 30ம் தேதிக்கு பிறகும் மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையாவிட்டால் மத்திய அரசு இந்த கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு அவற்றை அமல்படுத்த வேண்டும் என்றும் கேரள அரசாங்கம் பரிந்துரைக்கிறது.

ஹைட்ராக்சிக்ளோரோகுவின் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

கொரோனாவைரஸ் தொற்றுக்கு இன்னும் நிரூபிக்கப்படாத மருந்தாகக் கருதப்படும் ஹைட்ராக்சிக்ளோரோகுவினை அமெரிக்காவுக்கு மூன்று குஜராத் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய உள்ளது என அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி கூறியதாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தை, தாங்கள் கேட்டபடி இந்தியா கொடுக்க முன்வராவிட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார்.

அதே நேரத்தில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும், இந்தியாவை நம்பியிருக்கும் அண்டை நாடுகளுக்கும் இந்த மருந்தை வழங்க இருப்பதாகவும், அதை அரசியலாக்க வேண்டாம் என்றும் இந்தியா தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இந்த மருந்தினை அமெரிக்காவுக்கு குஜராத் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய இருப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஹைட்ராக்சிக்ளோரோகுவின் (Hydroxychloroquine) என்ற அந்த மருந்தை 'கேம் சேஞ்சர்' என்று டிரம்ப் குறிப்பிடுகிறார். ஆனால், அது கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கான எந்த ஆய்வு முடிவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: