கபசுரக்குடிநீர் கொரோனாவை கட்டுப்படுத்துமா? – என்ன சொல்கிறார் தமிழக தலைமைச் செயலர்

கொரோனா தொற்று பரிசோதனை

பட மூலாதாரம், ARUN SANKAR/Getty images

"அறிவியல் ரீதியாக தற்போது வரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கபசுரக்குடிநீர் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன," என தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தாக்கத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் இரண்டு சதவீம் பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், தமிழகத்தில் அறிகுறிகள் தென்படும் நபர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியபடி சோதனைகள் செய்யப்படுகின்றது என்றும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

''டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து சென்று திரும்பிய சுமார் 700 நபர்கள் யார் என்றும் அவர்கள் எங்குள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பலரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவர்களும் இரண்டு நாட்களில் கண்டறியப்படுவார்கள். நம்மிடம் பாதிப்புக்கு உள்ளவர்களைப் பார்க்கும்போது, வெளிநாடுகள், வெளிமாநிலத்திற்கு சென்றவர்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். டெல்லி சென்று திரும்பியவர்களை, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்,'' என தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.

சித்த மருத்துவ கபசுரக்குடிநீர் கொரோனவை கட்டுப்படுத்துவதில் பலன் தருமா என செய்தியாளர்கள் கேட்டபோது, ''அறிவியல் ரீதியாக தற்போதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. கபசூரக்குடிநீர் தொடர்பான ஆய்வுகள் நடந்துவருகின்றன,'' என்றார்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் துரிதமாக வழங்கிவருவதாக கூறிய அவர், மூன்று அடுக்கு முகக்கவசங்கள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டாலும், தமிழகத்தில் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன என்றார்.

''தினமும் இரண்டு கோடி முகக்கவசங்கள் திருப்பூரில் தயாராகிறது. தமிழகத்தில் சிறைகளில் உள்ள கைதிகள் மூலமாக முகக்கவசங்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்துவருகிறன. அதேபோல சுயஉதவிக்குழுக்கள் மூலமாக கிருமிநாசினிகள் தயாரிப்புக்கான பணிகளும் நடந்துவருகின்றன,'' என்றார் சண்முகம். வென்ட்டிலேட்டர்களை மத்திய அரசு அளிக்கும் என்றாலும், தமிழக அரசு தாங்களாவே வென்ட்டிலேட்டர்களை வாங்க முயற்சி எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் நிலை என்ன?

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,251ஆக உள்ளது. இவர்களில் 102 பேர் குணமடைந்துவிட்டனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நேற்று (மார்ச் 30) வரை 67ஆக இருந்த எண்ணிக்கை, புதிதாக ஏழு நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், இன்று காலை நிலவரப்படி 74 ஆக அதிகரித்துள்ளது.

இதில் உயிரிழந்த ஒருவர் மற்றும் குணமடைந்த ஆறு பேர் ஆகியோரும் அடக்கம். இப்போது மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 67ஆக உள்ளது.

புதிதாக தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் அவர்கள் நல்ல உடல்நிலையோடு இருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றைக் குறைக்கும் நடவடிக்கையாக, கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் 12 மாவட்டங்களில் காணொளி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது என கூறப்பட்டள்ளது

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் தொலைவு வட்டத்தை கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் (Containment zone) என்றும் இரண்டு கிலோமீட்டர் தொலைவை இடைப்பகுதி (Buffer zone) என வரையறுக்கப்பட்டு, இந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆரம்பக்கட்ட சோதனை நடத்தியுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'

இதன்படி, 12 மாவட்டங்களில் 1,08,677 வீடுகளில் உள்ள சுமார் மூன்று லட்சம் நபர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் அரியலூர் ஆகியவை சோதனை நடத்தப்பட்ட 12 மாவட்டங்கள் ஆகும்.

டெல்லி நிசாமுதீன் நிகழ்வால் தெலங்கானாவில் உயிரிழப்பு

டெல்லி நிசாமுதீனில் உள்ள ஒரு மசூதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்ட 6 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தெலங்கானாவில் உயிரிழந்தனர்.

இதே கூட்டத்தில் கலந்துகொண்ட மத குரு ஒருவர் கடந்த வாரம் ஸ்ரீநகரில் உயிரிழந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த கூட்டத்தில் மலேசியா, இந்தோனீசியா, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேந்தவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 'தப்லிகி ஜமாஅத்' நடத்திய இந்த கூட்டத்தில் 2000 பேர் கலந்துகொண்டனர் என்பதை முஸ்லிம் மத அமைப்பு ஒன்று உறுதி செய்கிறது.

ஆனால் இந்தியாவில் ஊரடங்கு தடை விதிக்கப்படும் முன்பே நிலவிய கொரோனா அச்சத்தால் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 1400 பேர், ஜாமத்திலேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை பரிசோதிக்க கூட்டத்தில் கலந்துகொண்ட 300 பேர் டெல்லியில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மத குரு மீது முதல் தகவல் அறிக்கை பதியும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: