You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம்
தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, பட்டப்படிப்பு மட்டுமல்லாது, 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் அளவுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டம் தற்போது அமலில் இருந்துவருகிறது. ஆனால், பட்டப்படிப்பை தமிழில் படித்தால், இந்த 20 சதவீத முன்னுரிமை பிரிவில் இடம்பெற்றுவிட முடியும்.
இந்த நிலையில், பள்ளிக்கூடப் படிப்பை தமிழில் படிக்காமல் பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்தவர்கள்கூட இந்தத் திட்டத்தின் பயனைப்பெற்று வந்தனர். இந்த நிலையில், இதனை மாற்றியமைக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்தத்தை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.
அதன்படி, பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்டுள்ள பணிகளுக்கு, பட்டப்படிப்பை மட்டுமல்லாமல், பத்தாம் வகுப்பையும் மேல் நிலை வகுப்பையும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். பள்ளிக்கூட சான்றிதழ்களில் இது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பை கல்வித் தகுதியாக கொண்டுள்ள அரசுப் பணிகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தமானது '2020ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்ட திருத்தம்" என்று அழைக்கப்படும். இந்தத் திருத்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
2010ஆம் ஆண்டில் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற்றபோது, "தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்" என, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்கான அரசாணை, 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. 2011ஆம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: