You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினிகாந்த் - இஸ்லாமிய குருமார்கள் சந்திப்பில் விவாதிக்கப்பட்டவை என்னென்ன?
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க தன்னால் முடிந்த அளவு முயற்சிகளை எடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் வாக்குறுதி கொடுத்தார் என ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்த இஸ்லாமிய மதகுருமார்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஜமா அத்துஉல் உலமா சபை தலைவர் காஜா மொகைதீன் பாகவி, துணைச்செயலாளர் அப்துல் அஜீஸ் பாகவி,இலியாஸ் ரியாஜி உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரஜினியை சந்தித்துப் பேசினர். சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய குருமார்கள், ரஜினியிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விரிவாக விளக்கம் தந்ததாகத் தெரிவித்தனர்.
''குடியுரிமை திருத்தச் சட்டத்தால் மக்களிடம் பரவலாக அச்சம் நிலவுகிறது என்பதை அவர் உணர்ந்துகொண்டார். முன்னதாக, இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை என அவர் தெரிவித்திருந்தார். அதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தோம். அதோடு, அவருக்கு விளக்கம் தருவதற்குத் தயாராக இருக்கிறோம் என்றோம். அவர் ஹைதராபாத்திலிருந்து திரும்பியதும் எங்களைச் சந்திக்க முனைந்தார்,'' என காஜா மொகைதீன் தெரிவித்தார்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்தவிதமான பாதிப்பு ஏற்படும் என விளக்கியபோது, கட்டாயமாக உதவுவதாக தெரிவித்தார் என்றார் காஜா மொகைதீன்.''எங்களின் நிலைப்பாட்டை அவர் புரிந்துகொண்டார். தற்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்குவதற்கு வேலை செய்வேன் என எங்களிடம் உத்தரவாதம் அளித்தார்,'' என்றார் மொகைதீன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: