ரஜினிகாந்த் - கமல் ஹாசன்: 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியா? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
தினத்தந்தி: ரஜினிகாந்த் - கமல் ஹாசன் 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியா?
தமிழகத்தின் மேம்பாட்டுக்காக தானும், ரஜினிகாந்தும் பேசிக்கொண்டு இருப்பதாகவும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்ட பின்னர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி முழுவீச்சில் தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தல் அறிக்கைக்கான முன்னோட்டமாக 'தமிழகத்தை புனரமைப்போம்-எதிர்காலத்துக்கான பாதை' என்ற தலைப்பிலான செயல்திட்டத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
அதில், விவசாயிகள் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, புரட்சிகரமான பொருளாதார திட்டம், ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.72 லட்சம் கோடி) பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது, மாணவர்கள் நலன், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், மீனவர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தேர்தலுக்காக காத்திருக்கிறோம்
இதையடுத்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேர்தல் அறிக்கைக்கு முன்னோட்டமாக இந்த செயல் திட்டத்தை சமர்ப்பித்திருக்கிறோம். விமர்சனங்கள் எழுந்தால் திருத்திக் கொள்வதற்கு எங்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். 2021 சட்டசபை தேர்தலுக்கு எத்தனை நாட்கள் இருக்கிறது? என்று வாக்காளர்கள் எண்ணிக்கொண்டு இருப்பது போல, நாங்களும் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் குறிப்பிட்டதுபோல, ஊழலை ஒழித்துவிட்டாலே 40 சதவீத திட்டங்களை நிறைவேற்றிவிடலாம்.
எங்களுடைய கட்சியில் தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தொண்டர்கள் மத்தியிலேயே தலைவர்களை உருவாக்கவேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை. என்னுடன் என் கட்சி முடியவேண்டும் என்று நினைப்பது தலைமை கிடையாது.
சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டுமா? அல்லது தனித்து போட்டியிடவேண்டுமா? என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
முனைப்பான தலைமை
தமிழகத்தை மாற்றவேண்டும் என்ற முனைப்பு பல வாக்காளர்களிடம் இருக்கிறது. நேர்மையாக மாற்ற நினைத்தாலும், பணம் கொடுத்து சிலர் கவிழ்த்துவிடுவார்கள் என்ற குழப்பமும் அவர்களிடம் இருக்கிறது. தமிழகத்தை முனைப்போடு மாற்றக்கூடிய தலைமை எங்களிடம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். வருங்காலத்தில் என்னுடைய தலைமையில் ஒரு அணி உருவானால், அதனை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று மற்ற கட்சிகள் முடிவு செய்யும்.
கூட்டணி அமையும்போது எங்கள் தரப்பில் இருந்து முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முன்மொழிவோம். அதே சமயத்தில் அவர்களுக்கும் தனி மரியாதை கொடுக்கவேண்டும். இதை பின்னர் விவாதித்து தான் சொல்லமுடியும். எங்கள் கட்சிக்கு, மக்கள் உடனான அற்புத கூட்டணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதற்கான பதில் வருங்காலத்தில் கிடைக்கும். மக்கள் அதற்கான நல்ல பதிலை கொடுப்பார்கள். மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.
ரஜினிகாந்த்
மாற்றத்துக்கான தலைமை, நேர்மையான தலைமை, தைரியமான தலைமை, புத்துணர்ச்சியான தலைமை உள்ளிட்ட பண்புகள் உடைய முதல்-அமைச்சர் வேட்பாளர்கள் வேறு யாரும் இல்லை என்று நான் கருதுகிறேன். என் பார்வையில் தமிழனாக எனக்கு தென்படவில்லை. யாரும் கோபப்படவேண்டியது இல்லை. ரஜினிகாந்தும், நானும் தமிழகத்தின் மேம்பாடு குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறோம். அதில் கொள்கை ரீதியாக மாறுதல் இருக்கலாம் என்று பரவலாக பேச்சு வருகிறது.
ஆனால் இப்போது அவர் (ரஜினிகாந்த்) சொல்லிக்கொண்டு இருக்கும் விஷயங்கள் சற்றே மாறுபட்ட தமிழகத்தின், தேசத்தின் நலன் நோக்கிய அணி சாராத நிலை இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது. அதனால் அவருடன் பேச்சுவார்த்தை நடப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. ஏற்கனவே தேவைப்பட்டால் இணைவோம் என்று கூறியிருக்கிறோம். நல்ல எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை நாங்கள் நடத்தவேண்டும். அதற்காக யார், யாரெல்லாம் நேர்மையை நோக்கி நகர துணிகிறார்களோ, அவர்களுடன் ஒன்று சேருவோம். தமிழகத்தை முன்னேற்றுவதுதான் எனது லட்சியம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
திராவிட வாக்கு வங்கி
கேள்வி: உங்கள் (கமல்ஹாசன்) தலைமையில் 3-வது அணி உருவானால், தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட திராவிட வாக்கு வங்கிகளை உடைத்து வெற்றி பெற முடியுமா?
பதில்: சரித்திரத்தில் சின்ன இடமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ள விஷயங்களில் தான் நான் முனைப்புடன் செயல்படுவேன். நான் பெரிதாக மதிக்கும் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருந்த திரைத்துறையில் இன்னொரு ஆள் வருவதற்கு இடம் இல்லை தம்பி, சின்ன, சின்ன வேஷங்கள் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவர் கள் இருக்கும்போதே, அவர்களுடைய ஆசியுடன் அந்த இடத்தை கைப்பற்றியவர்கள் நாங்கள். அவர்களுடைய ஆசியுடன், போட்டியாளர்களாக அல்ல. அந்த தலைமை அரசியலிலும் இப்போது இருக்கிறது என்று நம்புகிறேன்.
இடைத்தேர்தலில் போட்டி?
கேள்வி: வாக்காளர்கள் பணம் வாங்குவதை நிறுத்தும் வரை இந்த மாற்றம் நிகழும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: வாக்காளர்கள் திருந்த வேண்டும் என்றால், அந்த தவறை தொடங்கியவர்கள் அவர்கள் என்று அல்லவா அர்த்தம். வாக்காளர்களை எப்படி கெடுத்தோமா, அதேபோன்று திருத்தவும் முடியும் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: மக்கள் நீதி மய்யத்தை கிராமங்களில் கொண்டு சேர்ப்பதற்கு திட்டம் இருக்கிறதா?
பதில்: கண்டிப்பாக நாங்கள் கிராமத்துக்கும் செல்வோம். அவர்களை பலப்படுத்தவேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். கிராம பஞ்சாயத்து என்ற விஷயம் நாங்கள் கண்டுபிடித்தது அல்ல. கேட்பாரற்று கிடந்த அந்த யோசனையை நாங்கள் முன்மொழிந்தோம். அது இப்போது வலுப்பெற்று வருகிறது. கட்சியை வலுப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
கேள்வி: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறைவால் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா?
பதில்: இதுதொடர்பாக நாங்கள் விவாதித்துக்கொண்டு இருக்கிறோம்.
யாருடன் கூட்டணி?
கேள்வி: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் தயாராக இருக்கிறதா?
பதில்: சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கு மக்கள் நீதி மய்யம் எல்லா வகையிலும் தயாராக இருக்கிறது. எங்களுடைய இலக்கு 2021 தேர்தல். அதனை நோக்கி நாங்கள் கவனமாக பயணித்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு பயன் உள்ளதாக இருக்கும் எல்லா நிகழ்வுகளையும் செய்கிறோம்.
கேள்வி: அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளோடு மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: கண்டிப்பாக இருப்பதாக நான் நம்புகிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.
அப்போது கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தினமணி: கொரோனா பாதிப்பு - தமிழகத்தின் நிலை என்ன?
தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 786 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்டதாகவும், இதையடுத்து அவா்கள் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் 25-ஆம் ஆண்டு விழா மற்றும் உலக எய்ட்ஸ் தின நிகழ்வு, சென்னை எழும்பூரில் உள்ள நல்வாழ்வு மற்றும் குடும்ப நலப் பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில் பங்கேற்ற அமைச்சா் சி. விஜயபாஸ்கா் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் வெள்ளி விழா மலரை வெளியிட்டார். மேலும், ஹெச்ஐவி தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வ அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்க ஊழியா்களுக்கு சிறப்புப் பரிசுகளையும், பாராட்டுச் சான்றுகளையும் வழங்கி கௌரவித்தார்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் கூறியதாவது:
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பிரத்யேக நடவடிக்கைகளை மாநில அரசு மிகத் தீவிரமாகவும், ஆக்கப்பூா்வமாகவும் மேற்கொண்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள் அதற்கான முன்னெடுக்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன.
அதன் பயனாக நாட்டிலேயே எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தமிழகம்தான் முதன்மையான மாநிலமாக உருவெடுத்துள்ளது.
பேறுகாலத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று பரவாமல் தடுப்பதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
கியூபா நாட்டுக்கு அடுத்தபடியாக நமது மாநிலம்தான் அத்தகைய தடுப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்குகிறது.
கொரோனா வைரஸ் (கொவைட்-19) முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகளைப் பொருத்தவரை மாநில அரசு தொடா் மருத்துவக் கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா அறிகுறிகளுடன் தமிழகத்தில் எவரும் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையான தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களில் காய்ச்சல், சளி இருப்பவா்கள் 28 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனா். அவ்வாறு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். அதில், 786 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், அவா்கள் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா் என்றார் அவா். இந்தச் சந்திப்பின்போது, சுகாதாரத்துறைச் செயலா் பீலா ராஜேஷ் , உயரதிகாரிகள் உடனிருந்தனா்.
இந்து தமிழ் திசை: அரசுக் கல்லூரிகளில் பாடவேளை நேரம் மாற்றம்

பட மூலாதாரம், Getty Images
அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் பாடவேளை நேரங்களில் மாற்றம் கொண்டுவர கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 114 அரசுக் கல்லூரிகள் இயங்குகின்றன. இதில் 70 சதவீத கல்லூரிகளில் காலை, மாலை என இரு பணி நேரமுறையில் (ஷிப்ட்) வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் காலை வகுப்புகள் காலை 8.45 முதல் மதியம் 1.15 மணி வரையும், மாலை வகுப்புகள் மதியம் 1.30 முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறுகின்றன. காலை நேர வகுப்பில் நிரந்தர பேராசிரியர்களும், மாலை நேர வகுப்பில் கவுரவ விரிவுரையாளர்களும் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் அரசுக் கல்லூரிகளில் உள்ள தற்போதைய நடைமுறையை மாற்றிவிட்டு, காலை 10 முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்த உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்க போதுமான நேரமின்மை மற்றும் மாலைநேர வகுப்புகளில் குறைவான மாணவர்களே படித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய பணி நடைமுறைக்கேற்ப தேவைப் படும் கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளின் விவரங்களை விரைவாக அனுப்பி வைக்க அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் : முதல் முறையாக சென்னை ஐ ஐ டியில் கருப்பு சட்டைக்கு தடை

பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 29ம் தேதி சனிக்கிழமை மாலை இந்திய துணை முதல்வர் வெங்கையா நாயுடு சென்னை ஐஐடியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றவிருப்பதால், மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என சென்னை ஐ ஐ டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையொட்டி மாணவர்கள் காணொளி புகைப்படம் எதுவும் பதிவு செய்யக்கூடாது, கைபேசிகள் மற்றும் எந்த விதமான கேட்ஜெட்ஸ் மற்றும் பிளாஸ்டிக் பைகள் கூட கொண்டு வர கூடாது என முக்கிய அறிவிப்புகள் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு சோதனைகளின்போது மாணவர்கள் தங்களின் அடையாள அட்டைகளைக் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதல் முறையாக இவ்வாறான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது என மாணவர் ஒருவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். ''இந்தியா 2020லிருந்து 2030 வரை : ஒரு தசாப்தத்திற்கான பார்வை'' என்ற தலைப்பில் வெங்கையா நாயுடு உரையாற்றவிருக்கிறார்.
இரண்டு நாள் முன்பு பிப்ரவரி 26 ம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த வெங்கைய நாயுடுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தினர். பட்டமளிப்பு விழாவிற்கு அணியப்படும் ஆடையையும், வெள்ளை நிற ஆடையாக வடிவமைக்கப்பட்டு, ஐ ஐ டி அங்கவஸ்திரம் என்ற ஆடையாக மாறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













