You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினிகாந்த் மனு: ஸ்டெர்லைட் விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தூத்துகுடியில் நடைபெறும் விசாரணைக்கு நேரில் வந்தால், ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்றும் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரலாம் என்பதால் தனக்கு விலக்கு கொடுக்கவேண்டும் என ரஜினிகாந்த் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப்போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை அரசியல் கட்சியினர், சமூக செயல்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்தும் தூத்துக்குடிக்குச் சென்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.
அந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தால் எந்த முதலீடும் வராது. இப்படித்தான் தமிழகம் வறுமையில் இருக்கும். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகிவிடும்" என்றும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு "சமூக விரோதிகளே காரணம்" என்றும் கூறினார். ரஜினியின் இந்த கருத்து பலத்த விமர்சனத்தைப் பெற்றது.
இதனை அடுத்து, தூத்துக்குடி போராட்டத்தின்போது வெடித்த வன்முறை தொடர்பாகவும், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணை தொடர்பாக,அவர் குறிப்பிட்ட சமூக விரோதிகள் யார் என்பது குறித்து விளக்கம் தர நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதியன்று அவர் ஆணையத்தில் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பதாக ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேரடியாக தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்க, தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளை எழுத்து வடிவில் சமர்பிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: