You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“பொது சொத்துக்கு சேதம் விளைவிப்போரை கண்டதும் சுட உத்தரவிடுவேன்” - ரயில்வே இணையமைச்சர்
பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரை கண்டதும் சுடுவதற்கு உத்தவிடுவேன் என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்திருக்கிறார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கு பொது செத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
இந்த போராட்டகளின்போது, காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ரெயில்வே அமைச்சரின் இந்த கருத்து வந்துள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, "ரயில்வேயில் சுகாதாரம், காலம் தவறாமை பேணும் வகையில் பல வேலைகளையும் 13 லட்சம் தொழிலாளர்கள் இரவும், பகலும் செய்கிறார்கள். எதிர்க்கட்சி ஆதரவு பெற்ற சில சமூக விரோத சக்திகள் நாட்டில் குழப்பங்களை உருவாக்குகின்றன" என்று சுரேஷ் அங்காடி தெரிவித்தார்.
மேலும், "இந்த குடியுரிமை திருத்த மசோதா யாருடையை குடியுரிமையையும் பறிக்கவில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கின்ற எந்தவொரு குடிமகனுக்கு இந்தியாவில் தங்கக்கூடிய உரிமைகளை வழங்கியுள்ளோம். உள்ளூர் சிறுபான்மை சமூகங்கள் சில, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றன. அவை காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.
"இதனை கண்டிக்கிறேன். இது தொடர்புடைய மாவட்ட நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்த சுரேஷ் அங்காடி, "ரயில்வே உள்பட பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், ஓர் அமைச்சராக அவர்களை கண்டவுடன் சுடுவதற்கு உத்தரவிடுவேன்" என்று கூறினார்.
வரி செலுத்துவோரின் பணத்தால் இவை தயாரிக்கப்படுகின்றன என்றார் அவர்.
ஒரு ரயிலை தயாரிக்க பல ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு தொழிலாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. எனவே, ரயில் மீது கல்லெறிந்தால் அல்லது சேதப்படுத்தினால், வல்லபாய் படேலை போல அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ் அங்காடி கருத்து தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: