நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கௌசல்யா #iamthechange

காணொளிக் குறிப்பு, நரிக்குறவர் சமூகத்தின் கல்வி அடையாளமாய் கௌசல்யா #iamthechange
    • எழுதியவர், மரிய மைக்கேல்
    • பதவி, பிபிசி தமிழ்

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 20ஆவது அத்தியாயம் இது.)

கௌசல்யாவுக்கு விருதுகள் மூலம் கிடைத்துள்ளன
படக்குறிப்பு, கௌசல்யாவுக்கு விருதுகள் மூலம் கிடைத்துள்ளன

"கல்வி பெரியதொரு சக்தின்னு புரிஞ்சிக்கிட்டு, பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில படிக்கத் தொடங்கினேன். இன்றைக்கு என்னை பார்த்து எனது சமூகத்தை சேர்ந்த பல பேர் பேர் கல்வி கற்கத் தொடங்கியுள்ளனர்," என்கிறார் இளம்பெண் கௌசல்யா.

செவிலியராக பணிபுரிய மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டிய கல்லுரிப் படிப்பில் கடைசி ஆண்டு படித்து வருகிறார் கௌசல்யா.

என்ன இது? மேல் நிலைப் பள்ளிப்படிப்புக்கு பிறகு பலரும் கற்கும் வழக்கமான படிப்புதானே? இதிலென்ன சிறப்பு இருக்கிறது? என்று பலருக்கும் தோன்றலாம்.

ஆனால், ஊசி, மணி, பாசியை தெருக்களில் விற்பனை செய்து, நாடோடிகளாக வாழ்ந்து வரும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், அதுவும் ஒரு பெண் இத்தகைய நிலைக்கு உயர்ந்திருப்பதால், கௌசல்யா கவனம் பெற்று வருகிறார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலைய சுற்றுச்சுவர் ஓரத்தில், ஒதுக்குப்புறமாக எவ்வித போக்குவரத்து வசதிகளும் இல்லாமல் அமைந்திருக்கிறது கௌசல்யாவின் குடியிருப்பு.

கௌசல்யா

இங்கு வாழ்ந்து வரும் சுமார் நூறு நரிக்குறவர் குடும்பங்களில் ராஜேந்திரன், வசந்தி தம்பதியருக்கு பிறந்த எட்டு (ஏழு பெண்கள், ஓர் ஆண்) குழந்தைகளில் ஒருவர்தான் கௌசல்யா.

இந்த சமூகத்தில் பிறந்து, பெற்றோர் என்ன சொன்னார்களோ, அந்த வேலைகளை செய்து வந்தவர்தான் கௌசல்யா.

பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தல், ஊசி மணி, பாசி மணி, பலூன் விற்பது என்று 13 வயது பெற்றோருடன் சென்று அவர்கள் வேலைகளையே செய்ததாகக் கூறுகிறார் கௌசல்யா.

13 வயதில் கல்வி கற்க எடுத்த முடிவுதான், தனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது என்கிறார் இவர்.

பள்ளிக்கு செல்லாமல் இருந்த இவர் மீது "சமூகம்" என்கிற தொண்டு நிறுவனத்தின் பார்வை விழுந்தது. கல்வி கற்க கௌசல்யாவை இந்த தொண்டு நிறுவனம் ஊக்கமூட்டயது. அப்போதுதான் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடும் என்று அவரே எதிர்பார்க்காத முடிவை அவர் எடுத்தார்.

Presentational grey line
Presentational grey line

அவரது கல்விப் பயணம் எளிதாக இருக்கவில்லை. தாய், தந்தையை விட்டு பிரிந்து இந்த தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இல்லத்திற்கு கௌசல்யா சென்றார்.

தங்களை விட்டு சென்றுவிட்டால், தங்கள் சமூகத்தின் இயல்பை தொலைத்து வாழ்வார்கள் என்று நம்புகிற கௌசல்யாவின் தந்தை, இந்த தொண்டு நிறுவனத்திடம் தொடக்கத்தில் சண்டையிட்டுள்ளார். கௌசல்யா கல்வியில் காணும் முன்னேற்றம் இப்போது அவரை அமைதியாக்கி இருக்கிறது.

13 வயது என்பதால், வயதிற்கேற்ப எட்டாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் கௌசல்யா. அப்போதுதான் எழுத்துகள், எண்கள், கணக்குகள், அறிவியல் பாடங்கள் எல்லாம் அவருக்கு அறிமுகமாயின.

கௌசல்யா

பள்ளியில் தன்னுடைய தொடக்க நாட்களை பற்றி கௌசல்யா நினைவு கூர்ந்தபோது, "என்னை எல்லோரும் வித்தியாசமாக பார்த்தாங்க. எல்லாரும் பேசுவதுபோல என்னால் பேச முடியாமல் மொழி பிரச்சனையும் இருந்தது. ஆசிரியர்கள் பாடம் நடத்தியது எதுவும் புரியல. அழுதும் இருக்கிறேன். ஆனால், படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்," என்று தெரிவித்தார்.

தனது கஷ்டங்களை எல்லா பகிர்ந்து கொண்டபோது, எழுத்துகளை கற்கவும், எல்லோரைப் போல பேசவும் இந்த தொண்டு நிறுவனம் பயிற்சி அளித்ததாக தெரிவித்தார் கௌசல்யா.

ஒவ்வொரு தேர்விலும், குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும், தன்னுடைய பின்னணியை, நிலைமையை ஆசிரியர்கள் நன்றாகவே புரிந்து நடந்து கொண்டார்கள் என்று அவர் கூறினார்.

"இரவு 11.30 மணி வரையும், காலையில் மூன்று மணிக்கு எழுந்தும், படித்து கடும் முயற்சி மேற்கொண்டு பத்தாம் வகுப்பில் 344 மதிப்பெண்கள் பெற்றேன்" என தெரிவிக்கும் கௌசல்யா, "மேனிலை பள்ளிக்கு சென்று படிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை" என்றார்.

கௌசல்யா

கௌசல்யாவுக்கு அடுத்த சவால் கல்லுரிப் படிப்பு. ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியிலுள்ள விநாயகா மிஷன் காலேஜ் ஆப் நர்சிங்-கில் செவிலியர் பட்டயப் படிப்பு (மூன்று ஆண்டுகள்) பயின்று வரும் இவர், இந்த கல்வியாண்டு படிப்பை முடிக்கவுள்ளார்.

பாடங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் சொல்லி கொடுக்கப்படுவதால் புரியாமல் தவித்த தனக்கு, கல்லுரி ஆசிரியர்களும், நண்பர்களும் பெரிதும் உதவினார்கள் என்கிறார்.

குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தூண்டிய கௌசல்யா

தான் படித்து, பத்தாம் வகுப்பில் 344 மதிப்பெண் பெற்றது, தனது சமூக மக்களிடம் பெரும் கவனம் பெற்றது என்கிறார் கௌசல்யா.

இந்த சமூக குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் போய்விடக் கூடாது என்று எண்ணிய கௌசல்யாவுக்கு உதவிகரம் நீட்டுகிற தொண்டு நிறுவனம், கல்வியில் கௌசல்யா பெற்று வரும் வெற்றிகளை அந்த மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பரப்புரை செய்துள்ளது.

கௌசல்யாவை பார்த்து அவரது தோழிகள் ஊர்வசியும், துர்காவும் ஓராண்டு நர்சிங் டிப்ளமோ படித்துவிட்டு, இப்போது சென்னையிலுள்ள மருத்துவமனையில் வேலைசெய்து வருகின்றனர்.

கெளசல்யா

உயர் கல்வி பயின்று வரும் கௌசல்யாவை பார்த்து, தாங்கள் வேலைக்கு அழைத்து செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் என்பதை பெற்றோர் உணரத் தொடங்கியுள்ளனர்.

மேலும், கௌசல்யாவுக்கு விருதுகள் மூலம் கிடைத்துள்ள அங்கீகாரம், இவரது சமூகத்தை சேர்ந்த எல்லா குழந்தைகளிடமும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இப்போது, லாஸ்பேட்டையில் இருந்து இந்த சமூக குழந்தைகள் அனைவரும் பள்ளி சீருடையில் பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.

விருதுகளால் அங்கீகாரம்

மேனிலை படிப்பு முடிந்து, நர்சிங் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதலாண்டில் கௌசல்யாவுக்கு கிடைத்த இரண்டு விருதுகள் பெரும் அங்கீகாரத்தை அவருக்கு வழங்கின.

Presentational grey line

2018ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பெண்கள் தினத்தில், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் தன்னம்பிக்கை மிக்க சிறந்த பெண் விருதை கௌசல்யாவுக்கு வழங்கி கௌரவித்துள்ளனர்.

நரிக்குறவர் சமூகத்தில் இருந்து கல்லூரி கல்வி பயிலும் பெண் என 2018 "சைல்டு லீடர்" விருதை (Child Leader Award) விநாயகா மிஷன் காலேஜ் ஆப் நர்சிங், கௌசல்யாவுக்கு வழங்கியது. முன்னதாக, 2017ம் ஆண்டு "சைல்டு லீடர்" விருதை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் தலைமை பண்புகளை வளர்க்க பணிபுரியும் அறக்கட்டளை ஒன்று இவருக்கு வழங்கியிருந்தது.

கௌசல்யா
படக்குறிப்பு, கௌசல்யா

நரிக்குறவர் சமூக குழந்தைகள் கல்வி கற்க வேண்டுமென ஊக்கமூட்டியதற்காக 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி "இளம் கலை சுடர்" விருதும், பசுமை சுற்றுச்சூழல் பணிகளில் பங்கேற்றதற்காக அப்துல் கலாம் பசுமை வளர்ச்சி இயக்கத்தின் விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.

கற்க வைப்பேன், கற்று கொடுப்பேன்

எம்.எஸ்சி நர்சிங் படித்து பேராசிரியராக வேண்டும் என்று கௌசல்யா உறுதியாக இருக்கிறார்.

எதிர்காலத்தில், தனது சமூக மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்வதோடு, அவர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்க செய்து, சுகாதாரத்தில் வளர தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதே லட்சியம் என்கிறார் கௌசல்யா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: