லாட்டரி மோகத்தால் குடும்ப தற்கொலை எதிரொலி: 14 பேர் கைது, 3 காவலர்கள் பணியிடை மாற்றம்

கடன் சுமை

மூன்று நம்பர் லாட்டரி விற்பனைக்கு உதவியாக இருந்த மூன்று காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

விழுப்புரம் மாவட்டம் நகை தொழிலாளி அருண் என்பவர் தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு சயனைடு விஷம் கொடுத்துவிட்டு, மனைவியுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் தனது தற்கொலைக்கு தொழில் நசிவு மற்றும் மூன்று நம்பர் லாட்டரியை காரணமாக குறிப்பிட்டிருந்தார். இதனால் விழுப்புரம் காவல் துறையினர் சட்டவிரோதமாக லாட்டரி விற்ற 14நபர்களை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக லாட்டரி விற்பவர்களுக்கு உதவியாக இருந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல்நிலைய எழுத்தாளர் செல்வம், விழுப்புரம் நகர காவல்நிலைய பெண் எழுத்தாளர்கள் ஜெயா மற்றும் எழிலரசி உட்பட மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரைப் பகுதியில் வசித்து வரும் அருண் என்பவருக்கு சிவகாமியுடன் திருமணமாகி, பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி என்று மூன்று பெண் குழந்தைகள் இருந்தன.

சொந்தமாக நகை செய்யும் தொழில் செய்து வந்த அருண், அந்த தொழில் நசிந்ததை அடுத்து, கூலிக்கு நகைத் தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கியுள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கும் வழக்கம் தொற்றிக்கொண்டது. தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

இதனால் குடும்பம் நடத்த முடியாமல் மன உளைச்சலில் தவித்து வந்த அருண், நேற்று இரவு தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்ட பிறகு மனைவியுடன் சேர்ந்து தானும் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை வீடியோ பதிவு செய்து அதனை வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார் அருண்.

அதில் தொழில் நசிவு, அதற்கு சங்கத்தால் உதவ முடியாமல் போனது பற்றியெல்லாம் பேசியுள்ள அவர், தன்னைப் போன்றவர்களை காப்பாற்றுவதற்கு, மூன்று சீட்டை ஒழிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடன் சுமை

தகவலறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் உயிரிழந்த 5 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துனர். மேலும், லாட்டரி சீட்டு விற்பவர்கள் தொடர்பாக 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

"தொழிலில் நஷ்டத்தால் தற்கொலை"

தற்கொலை சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் கூறுகையில், "அருண் இறப்பதற்கு காரணம் லாட்டரி சீட்டு மட்டுமே காரணம் கிடையாது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் அதிக அளவில் கடன் வாங்கிவிட்டு அதற்கு வட்டி கட்ட முடியாமல்தான் தற்கொலை செய்துள்ளார்," என்றார் அவர்.

மேலும், "இந்த வருடத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 200வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதில், விழுப்புரம் நகரத்தில் மட்டும் 143 வழக்குகள் பதிவு செய்து, 155 நபர்களை லாட்டரி விற்பனைக்காக கைது செய்திருக்கிறோம்," என்றார் அவர்.

தொடர்ந்து, "சிறப்பு சோதனையின் போது, சட்டவிரோதமாக செஞ்சி மற்றும் வலத்தி பகுதியில் லாட்டரி விற்பனை செய்த நபர்களை கைது செய்து, அப்பகுதியில் நடவடிக்கை எடுக்கத் தவறிய இரண்டு ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடந்த தற்கொலை சம்பவத்திற்கு பிறகு 13நபர்களை கைது செய்துள்ளோம். தொடர்ந்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: