You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுஜித் வில்சன் மரணம்: சோகத்தில் மூழ்கியுள்ள வீடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல், நிதியுதவி
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள சுஜித்தின் வீட்டில், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, இன்று (செவ்வாய்கிழமை) சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். அதிமுக கட்சி சார்பில் ரூ.10 லட்ச ரூபாயும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்ச ரூபாயும் அவர் குடும்பத்திற்கு நிதியுதவியாக அளித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் வந்திருந்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "ராணுவ வீரர்கள் வரவழைக்கப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். முக்கொம்பில் நடந்த இது போன்ற ஒரு மீட்பு நடவடிக்கையை வந்து பார்த்த ராணுவ அதிகாரிகள், தமிழக அரசு பின்பற்றும் முறை சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துச் சென்றனர். திமுக ஆட்சியின்போது இதுபோன்று ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்த சம்பவத்திலும் குழந்தை இறந்தே எடுக்கப்பட்டது. அப்போது அவர்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவில்லை. தற்போது, நாங்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளோம்" என்று பழனிசாமி தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் நிதியுதவி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து குழந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார். குடும்பத்துக்கு அவர் ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார்.
தமிழக அரசின் மீட்புப் பணிகள் மந்தமாகவே இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். "குற்றம்சாட்டவேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. நான் நேரில் வந்தால் மீட்புப் பணியில் தொந்தரவு ஏற்படும் என்பதால் இங்கு வரவில்லை. ஆனால், தொலைக்காட்சியில் மீட்புப் பணியைத் தொடர்ந்து கவனித்துவந்தேன்" என்று அவர் தெரிவித்தார்.
"நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித்துக்கு அஞ்சலி செலுத்தினேன். ஆற்றுப்படுத்த இயலாத பெரும் வேதனை இது" என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
குழந்தை விழுந்த கிணறு, குழந்தையை மீட்பதற்காக தோண்டப்பட்ட குழி இரண்டுமே காங்கிரீட் போட்டு மூடப்பட்டுள்ளது. அங்கு தடுப்புகள் போடப்பட்டுள்ள நிலையில், பலரும் அங்கு வந்து அந்த இடத்தை பார்வையிட்டு வருகிறார்கள்.
தற்போது சுஜித்தின் வீடு, ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.
வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள சுஜித்தின் புகைப்படத்திற்கு, பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருவதாக பிபிசி தமிழுக்காக களத்தில் இருக்கும் செய்தியாளர் ஹரிஹரன் தெரிவிக்கிறார்.
தன் குழந்தை சுஜித் இறந்த கவலையில் இருக்கும் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அவருக்கு தற்போது குளுக்கோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. அவருடன் ஒரு செவிலியர் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சுஜித்தின் வீடு அவரது உறவினர்களாலும், பொது மக்களாலும் சூழ்ந்திருக்கிறது.
இன்று காலை சுமார் 7 மணியளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சுஜித்தின் உடல், அவனது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவில்லை. நேரடியாக மருத்துவமனையில் இருந்து 8.15 மணி அளவில் நடுக்காட்டுப்பட்டி அருகில் உள்ள பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்ட சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடும் முயற்சிகளுக்கு பின்னரும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போய்விட்டதே என்று சுஜித்தின் குடும்பத்தினரும், உறவினர்களும், கிராம மக்களும் பெருங்கவலை அடைந்துள்ளனர்.
Sujith மரணத்தால் கலங்கிய வைரமுத்து | "உனக்காக அழுத கண்ணீர் எல்லாம் உன்னை அழுக வைத்துவிட்டதே"
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்