ரவிசங்கர் பிரசாத்: "பொருளாதாரம் குறித்து நான் கூறியதைத் திரும்பப் பெறுகிறேன்"

"தேசிய விடுமுறை தினமான அக்டோபர் 2-ம்தேதி வெளியான மூன்று இந்தி திரைப்படங்கள் அன்றைய தினமே ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. எனவே, நாட்டின் பொருளாதாரம் நன்றாகத்தான் இருக்கிறது" என்று கூறியிருந்தார் இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

ஆனால், தற்போது தாம் பேசிய இந்த குறிப்பிட்ட விஷயத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

"மூன்று படங்கள் ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்த விஷயம் உண்மைதான். திரைத்துறை பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதும், வரிப்பணத்தில் குறிப்பிடத்தக்கப் பங்கினையும் திரைத்துறை தருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த மோதி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பேசினேன். ஆனால், இந்த குறிப்பிட்ட வசூல் விஷயம் குறித்து நான் பேசியது, வேறு விதமாகப் பிரதிபலித்திருக்கிறது. அதனை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என ரவிசங்கர் பிரசாத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று என்ன கூறினார்?

சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், வார், ஜோக்கர், சாயிரா ஆகிய மூன்று படங்களைக் குறிப்பிட்டு இவை, 120 கோடி ரூபாய் வசூல் சாதனையைப் படைத்துள்ளதாகத் தெரிவித்தார். இதனால், பொருளாதாரம் வலுவாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரவிசங்கர் பிரசாத்தின் கருத்து சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில் தான் தாம் கூறியதை ரவிசங்கர் பிரசாத் திரும்பப் பெற்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :