You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிரத்னம் உள்ளிட்ட 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கு ரத்து
கும்பல் கொலைகளுக்கு எதிராக இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கூட்டு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கை பிகார் மாநில போலீசார் ரத்து செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம், இந்தியாவில் நடைபெற்று வரும் கும்பல் கொலைகள் குறித்து கவலை தெரிவித்து, இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட பலர் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.
அந்த கடிதத்தின் மூலம், 49 பிரபலங்கள் "நாட்டின் பிம்பத்தை களங்கப்படுத்தியதுடன், பிரதமரின் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதுடன், பிரிவினைவாத போக்குகளை ஆதரித்ததற்காக" இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார்தாரரான வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு தான் பிகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதற்கு கடந்த ஆகஸ்டு 20ஆம் தேதி அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டதுக்கு இணங்க நேற்று (வியாழக்கிழமை) இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஓஜா கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசத் துரோகம், மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிகாரின் முசாபர்பூர் காவல்நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை ரத்து செய்வதாக பிகார் மாநில போலீசார் தெரிவித்தனர்.
கடிதத்தில் எழுதப்பட்டது என்ன?
மேற்கண்ட பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் எழுதிய கூட்டு கடிதத்தில், "நமது நாட்டில் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பல மோசமான சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம்.
நமது அரசமைப்பு, இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோஷியலிச ஜனநாயக குடியரசு; இங்கு மதம், இனம், பாலினம், சாதி இது எல்லாவற்றையும் கடந்து அனைத்து குடிமக்களும் சமம் என்கிறது. எனவே அரசமைப்புபடி குடிமக்கள் அனைவரும் அவர்களுக்கான உரிமையை பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் இதனை எழுதுகிறோம்.
முஸ்லிம், தலித் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் கூட்டாக தாக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
நீங்கள் நாடாளுமன்றத்தில் இம்மாதிரியான கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்தீர்கள் ஆனால் அது மட்டும் போதாது. இதை செய்தவர்கள் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தகவல்படி 2016ஆம் ஆண்டில் தலித்துகளுக்கு எதிராக 840 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் அது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மிகவும் குறைவே. அக்டோபர் 2018 ல் இருந்து ஜனவரி 1, 2019 வரை மத ரீதியிலாக 254 வெறுப்பு கொலைகள் நடைபெற்றுள்ளன. அதில் 91 பேர் கொல்லப்பட்டனர்; 579 காயமடைந்துள்ளனர்." என தேசிய குற்றவியல் ஆவணத்தின் தகவலைச் சுட்டிக்காட்டியும் அதில் எழுதியுள்ளனர்
'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கங்கள் தற்போது சண்டையின் தொடக்கமாகிவிட்டது. அதன் பெயரால் சட்டம் ஒழுங்கு மற்றும் பிற கும்பல் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. மதத்தின் பெயரால் பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. இது பழங்காலம் அன்று. ராமரின் பெயருக்கு இம்மாதிரியான சம்பவங்களால் வரும் அவப்பெயரை நீங்கள் தடுக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. அரசுக்கு எதிரான கருத்துகளை கூறுவதால் மக்கள் `ஆண்டி நேஷனல்` என்றும் `அர்பன் நக்சல்ஸ்` என்றும் கூறப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
இந்திய அரசமைப்பின் 19ஆவது பிரிவு குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கிறது. அதில் எதிர்ப்பு தெரிவிப்பதும் கூட அடங்கும்" என அந்த கடிதம் குறிப்பிடுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்