You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தரப்பிரதேசம், பிகாரில் கடும்மழை வெள்ளம்: உயிரிழப்புகள் 100-ஐ தாண்டியது
உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் கடும் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ள நீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்ததை காட்டும் படங்கள் வெளிவந்துள்ளன.
பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்படும் மக்கள் - காணொளி
ரயில் போக்குவரத்து,, சாலைகளில் வாகன போக்குவரத்து, சுகாதாரசேவைகள் , மின்சாரம் போன்றவை இவ்விரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
வியாழக்கிழமை முதல் 93 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அரசு அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பாலியா மாவட்ட சிறைசாலை கட்டடத்தில் வெள்ளநீர் புகுந்துவிட்டதால் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட கைதிகளை வேறிடத்துக்கு அதிகாரிகள் இடமாற்றினர்.
குடியிருப்பு பகுதிகள், பிரதான சாலைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ளன. இரு மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டு உள்ளன.
அதேவேளையில், பிகாரில் பெய்த கடும் மழை, வெள்ளத்தால் அங்கு 29 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது,
பிகாரின் தலைநகரான பாட்னாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாட்னா நகரில் 80 சதவீத வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
வீடுகளில் மட்டுமல்லாமல், மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்கள் வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இது பேரழிவு என்று பிகார் முதலைமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் ஆட்கள் படகில் சென்று சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளில் சிக்கியுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் குடிநீரும், உணவும் இன்றி தவித்து வருகின்றனர்.
பாட்னாவில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்துவிட்டதால் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும் மக்கள் - காணொளி
கடந்த சில நாட்களாக பிகார் முழுவதும் பெருமழை பெய்து வந்தாலும், பாட்னா நகரில் கட்ந்த 48 நேரத்தில் பதிவாகிய மழை 10 வருடங்களில் இல்லாத அளவு என்று கூறப்படுகிறது.
வானிலை முன்னறிவிப்பு மையத்தின் கூற்றுப்படி அடுத்த 48 மணி நேரங்களில் பாட்னா உட்பட பிகாரின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் பேரழிவு துறை மாநிலம் முழுவதற்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
கனமழையால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பாட்னா நகரில் வீதி எங்கும் தண்ணீர் சூழ்ந்துள்ளது போன்ற புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. பலர் பிகாரில் உள்ள மோசமான வடிகால் அமைப்பே இதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
Kashmir ஊடுருவி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது - Malaysian PM Mahathir speech in UN General Assembly
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்