பன்வாரிலால் புரோஹித் - “உயர்கல்வியில் சீனாவைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது”

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: "உயர்கல்வியில் சீனாவைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது"
உயர்கல்வி பெறுபவர்கள் எண்ணிக்கையில் சீனாவைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதியம் (யுனிசெப்) ஆகிய அமைப்புகளின் சார்பில் 'தரமான மற்றும் நிலைத்த கல்வி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

பட மூலாதாரம், Getty Images
இதன் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகள் உள்ளன. அதில் 80 சதவீதம் அரசுப் பள்ளிகளாகவும், 37 சதவீதம் கிராமப்புறங்களிலும் உள்ளன. தேசிய அளவில் அரசுப் பள்ளிகள் தான் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. நம்நாட்டில் உயர்கல்வி பெறுபவர்கள் சராசரி 28.5 சதவீதமாக உள்ளது. அதை விட கூடுதலாக தமிழகத்தில் 46 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை சீனாவில்கூட 39 சதவீதமே உள்ளது." என்றார்.

தினத்தந்தி: 'டிக் டாக்' செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

பட மூலாதாரம், Getty Images
ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு அளித்த புகாரின்பேரில், 'டிக் டாக்', 'ஹலோ' ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அவற்றுக்கு தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
டிக் டாக், ஹலோ ஆகிய செல்போன் செயலிகள் (ஆப்) மூலம், ஏராளமானோர் தங்கள் திறமைகளை வீடியோ எடுத்து பரப்பி வருகிறார்கள். இது, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கிடையே, இந்த செயலிகள், தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச், பிரதமர் மோடிக்கு புகார் அனுப்பியது.
அதன்பேரில், டிக் டாக், ஹலோ ஆகியவற்றிடம் விளக்கம் கேட்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 21 விதமான கேள்விகள் அடங்கிய பட்டியலையும் அனுப்பி உள்ளது. அந்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காவிட்டால், இரண்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுள்ள சில கேள்விகள் வருமாறு, "தேசவிரோத செயல்பாடுகளின் கூடாரமாக செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? இந்திய பயனாளர்களின் தகவல்களை இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் எந்த வெளிநாட்டு அரசுக்கோ, எந்த மூன்றாம் தரப்புக்கோ அளிக்க மாட்டோம் என்று உத்திரவாதம் அளிக்கத் தயாரா?
பொய் செய்திகளை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? இந்த செயலிகளை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 13 என்று நிர்ணயித்து இருப்பது குழந்தைகள் உரிமையை மீறிய செயல்.
11 ஆயிரம் போலி அரசியல் விளம்பரங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்காக சில ஊடகங்களுக்கு 'ஹலோ' நிறுவனம் பெருமளவு பணம் கொடுத்ததாக கூறப்படுவதற்கு பதில் என்ன?" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து டிக் டாக், ஹலோ நிறுவனங்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது, "இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் இல்லாமல் எங்கள் வெற்றி சாத்தியம் அல்ல. அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. ஆகவே, இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளோம். தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த முதலீட்டை மேற்கொள்கிறோம். 'திறன்மிகு இந்தியா' போன்ற திட்டங்களை ஆதரிப்போம்." என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தினமணி: 'கீழடியில் வரும் மார்ச் மாதத்துக்குள் அருங்காட்சியகம்'
கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் கண்டெடுக்கப்படும் பொருள்களை காட்சிப்படுத்த தனி அருங்காட்சியகம் வரும் மார்ச்சுக்குள் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதத்தில் திமுக உறுப்பினர் தாயகம் கவி அதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு, பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், "கீழடியில் முதல் மூன்று அகழ்வாய்வுப் பணிகள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டன. அடுத்துள்ள இரண்டு பணிகளும் தமிழக அரசாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் மூன்று ஆய்வுகளிலும் 8 ஆயிரம் வரையிலான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அடுத்த இரண்டு ஆய்வுகளிலும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் தனித்துவமான முறையில் காட்சிப்படுத்த அருங்காட்சியகம் வரும் மார்ச் மாதத்துக்குள் அமைக்கப்படும். இதற்காக பள்ளிக்கல்வித் துறையிடம் இருந்து ரூ.1 கோடி வரை நிதி பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்." என்கிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'டிஜிட்டல்பரிவர்த்தனையில் முன்னணி வகிக்கும் தமிழகம்'
இந்திய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. அதாவது, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா, டெல்லிக்கு அடுத்ததாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சென்னை முன்னணி வகிக்கிறது. பிற நான்கு இடங்களையும் ஆக்கிரமித்து இருப்பது மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகும் .

பட மூலாதாரம், The New Indian Express
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












