நடிகர் சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தை எதிர்க்கும் எச். ராஜா மற்றும் தமிழக அமைச்சர்

பட மூலாதாரம், Facebook
தினத்தந்தி: நடிகர் சூர்யா கருத்தை எதிர்க்கும் எச். ராஜா மற்றும் தமிழக அமைச்சர்
நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதனால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார். பஸ் வசதி இல்லாத கிராம மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்படும் என்றும், படிப்பை அவர்கள் பாதியில் நிறுத்திவிடும் நிலைமை இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். கிராமப்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் வசதிகள் குறைவாக உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையும் இருக்கிறது. இதனால் கல்வி தரம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக இல்லை. இதுபோன்ற குறைபாடுகளை களையாமல் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் அரசு கவனம் செலுத்துவதாகவும் கண்டித்தார்.
வெளிநாட்டில் 8-வது வகுப்பு வரை தேர்வுகளே கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டினார். புதிய கல்வி கொள்கையை எதிர்க்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சமூக அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார். சூர்யா பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில் சூர்யா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் தரம் மேம்படும் என்றும் வலைத்தளத்தில் சிலர் பேசிவருகிறார்கள். சூர்யாவின் பேச்சுகள் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பா.ஜனதா பிரமுகர் எச்.ராஜா கண்டித்துள்ளார்.
அது போல தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, "அரசின் கல்விக்கொள்கையைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு நடிகர் சூர்யா பேச வேண்டும். அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை." என்று கூறி உள்ளார்.

இந்து தமிழ்: 'நிதி நெருக்கடியில் 6,538 அரசு உதவிபெறும் பள்ளிகள்'

பட மூலாதாரம், Getty Images
நிர்வாக மானியம், பள்ளி மானியங்களை அரசு வழங்காததால் தமிழகத்தில் 6,538 அரசு உதவிபெறும் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் 5,025 தொடக்கப் பள்ளிகள், 1,513 நடுநிலைப் பள்ளி கள் என 6,538 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் கள், ஆசிரியரல்லாத பணியாளர் களுக்கு அரசு ஊதியம் வழங்கு கிறது. மேலும் இருக்கை, மேஜை, கரும்பலகை போன்ற தளவாடப் பொருட்கள் வாங்கவும், பள்ளிக்கு வெள்ளை அடித்தல், மின் கட்டணம், குடிநீர் ஏற்பாடு போன்றவைக்காக அரசு நிர்வாக மானியத்தை வழங்குகிறது.அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் அடிப்படை ஊதி யத்தில் 2 சதவீதம் நிர்வாக மானியமாக வழங்கப்பட்டு வந்தது.
மேலும் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலமும் பள்ளி மானியமாக தொடக் கப் பள்ளிகளுக்கு ரூ.7 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2014-க்கு பிறகு நிர்வாகம் மானியம் வழங்க வில்லை. அதேபோல் 2017-ல் இருந்து பள்ளி மானியத்தையும் நிறுத்திவிட்டனர். இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றன.
- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: '37 எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள்?': வினவிய முதல்வர் பழனிசாமி

பட மூலாதாரம், ARUN KARTHICK
ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் விவகாரத்தில் திமுகவைவிட 100 மடங்கு உணர்வு எங்களுக்கு அதிகம் உள்ளது. அதிமுகவில் 37 எம்.பி.க்கள் இருந்தபோது என்ன சாதனை செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினீர்கள். அதே கேள்வியைத்தான் நாங்கள் இப்போது கேட்கிறோம் என்று சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த பிரச்னையை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பினார். இந்தப் பிரச்சனையில் அரசின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்புச் செய்தனர்.
இதனிடையே, இந்தப் பிரச்சனையில் முதல்வர் பழனிசாமி, "தபால் துறை தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற சூழலை உருவாக்கவும், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலும் பேரவையில் கோரிக்கைகளை எழுப்பியதாகத் தெரியவில்லை.
திட்டமிட்டு வேண்டுமென்றே வெளிநடப்புச் செய்திடும் நோக்கத்தில் திமுகவினர் நடந்துள்ளனர். அதிமுகவில் 37 எம்.பி.க்கள் இருந்தபோது என்ன சாதனை செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினீர்கள். அதே கேள்வியைத்தான் நாங்கள் இப்போது கேட்கிறோம். மத்திய அரசு தொடர்பான பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை அங்கே அனுப்பி வைத்துள்ளார்கள்.
ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் திமுகவினருக்கு உள்ள உணர்வைப் போன்றே எங்களுக்கும் நூறு மடங்கு உள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சி எம்.பி.,க்களை குரல் எழுப்பச் சொல்லுங்கள். நாங்களும் தொடர்ந்து குரல் எழுப்புவோம். இந்தப் பிரச்னையில் மத்திய அரசு என்ன முடிவை எடுக்கிறது என்று பார்ப்போம் என்றுதான் துணை முதல்வர் தெரிவித்தார். அதில் என்ன வேறுபாடு இருக்கிறது. ஒரு நாள் வரை பொறுத்திருக்க மாட்டீர்களா. அதற்குள் என்ன அவசரம்?" என்று கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.



பட மூலாதாரம், இந்து தமிழ்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'குழந்தை கடத்தல்'
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் த்ன பெற்றோருடம் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தப்பட்டிருக்கிறார். இந்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்ததாக கூறுகிறது அந்நாளிதழ்.
சிசிடிவி காட்சியில் சந்தேகத்திற்குரிய ஒரு நபர் குழந்தையை சுமந்து கொண்டு போகும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதுப்போல திருவள்ளூர் செங்கல் சூளையில் காணாமல் போன குழந்தை பிணமாக கண்டெக்கப்பட்டார் என்கிறது அந்நாளிதழ்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












