ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு: முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட தொகுதியா? #BBCFactCheck

    • எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
    • பதவி, பிபிசி

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் வியாழக்கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இதனையடுத்து "#RahulTharangam (ராகுல் அலை) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவரது சகோதரியான ப்ரியங்கா காந்தியும் உடனிருந்தார்.

பாரம்பரியமாக ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியோடு, வயநாட்டிலும் அவர் போட்டியிடுவார் என்று கடந்த ஞாயிறன்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு பேசிய ராகுல் காந்தி, "தென் இந்தியாவுடன் நாங்கள் நிற்போம் என்பதை வெளிப்படுத்தவே, வயநாட்டில் போட்டியிடுகிறேன்" என்றார்.

ஆனால், அச்சம் காரணமாகவே ராகுல் காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுவதாக ஆளும் பாஜக கூறுகிறது.

மதத்தை அடிப்படையாகக் கொண்டே, ராகுல் காந்தி இவ்வாறு முடிவெடுத்திருப்பதாக, மகாராஷ்டிராவில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி கேலியாக குறிப்பிட்டார்.

பிரதமர் மோதியின் இந்த அறிவிப்புக்கு பிறகு சமூக ஊடகங்களில், பெரும் குழப்பம் நிலவியது. "முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி" என்பதால் ராகுல் வயநாடு தொகுதியை தேர்ந்தெடுத்தாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

வயநாடு தொகுதியில் இந்துக்களை விட அதிகளவில் முஸ்லிம்களே இருப்பதால்தான், ராகுல் அத்தொகுதியை தேர்ந்தெடுத்தார் என பல வலதுசாரி அமைப்புகள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.

எனினும், இதனை காங்கிரஸ் ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை விட, இந்துக்களே அங்கு அதிகம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவை சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் கூற்றுகள் உண்மையல்ல என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

மலப்புரம் மாவட்டம், வயநாடு மாவட்டம் மற்றும் வயநாடு மக்களவை தொகுதி ஆகியவற்றின் தகவல்களை ஒரே நேரத்தில் பகிர்ந்ததே இந்தக் குழப்பத்திற்கு காரணம்.

முதல் கூற்று: வயநாட்டில் இந்துக்களே பெரும்பான்மையானவர்கள்.

வயநாட்டில் இந்துக்களின் பெரும்பான்மை அதிகம் என்று கூறும் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அம்மாவட்டத்தின் மக்கள் தொகை கணக்கீட்டை வைத்து கூறுகின்றனர்.

சிலர் மாவட்டம் மற்றும் மக்களவை தொகுதி ஆகிய இரண்டையும் குழப்பிக் கொண்டுள்ளனர்.

2011 மக்கள் தொகை கணக்கீடுபடி, வயநாடு மாவட்டத்தில் முஸ்லிம்களை விட இந்துக்களே அதிகம். அங்கு 50% இந்துக்களும், 30% முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.

ஆனால், அம்மாவட்டத்திற்கான தரவுகளை வைத்து, அது முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட தொகுதியா இல்லையா என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

வயநாடு மாவட்டம், வயநாடு மக்களவை தொகுதி, இரண்டும் வெவ்வேறாகும்.

வயநாடு தொகுதி 2009ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதில் கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டத்தின் பகுதிகள் அடங்கும்.

இரண்டாம் கூற்று : வயநாடு முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்டது

முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட தொகுதி என்பதால் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார் என்று பாஜக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் மாவட்டமான மலப்புரம், இதில் வருவதால் இத்தொகுதி முஸ்லிம் பெரும்பான்மை கொண்டது என்றும் ட்விட்டர் பயணாளர்கள் கூறுகின்றனர்.

கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில், வயநாட்டில் மொத்தம் ஏழு சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன.

-கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் 13 சட்டமன்ற தொகுதிகளில், ஒரே ஒரு சட்டமன்ற தொகுதிதான் (திருவெம்பாடி), வயநாடு மக்களவை தொகுதிக்குள் வரும்.

-வயநாடு மாவட்டத்தின் மூன்று சட்டமன்ற தொகுதிகள் (கல்பேட்டா, சுல்தான் பத்தேரி மற்றும் மனன்தாவடி) வயநாடு மக்களவை தொகுதிக்குள் வரும்.

-மலப்புரம் மாவட்டத்தின் 16 சட்டமன்ற தொகுதிகளில், மூன்று தொகுதிகள் மட்டும்தான் வயநாடு மக்களவை தொகுதிக்குள் வரும்.

மலப்புரத்தில் இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிகம் என்பது உண்மைதான். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மலப்புரத்தில் 74% முஸ்லிம்களும், 24% இந்துக்களும் உள்ளனர்.

இதனால் மட்டும் வயநாடு தொகுதி முஸ்லிம்கள் பெரும்பான்மை தொகுதி என்று கூறிவிட முடியாது. ஏனெனில் மலப்புரம் மாவட்டத்தின் காற்பங்குதான் வயநாடு மக்களவை தொகுதியில் அடங்கும்.

கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் படி, 2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அத்தொகுதியில் 75 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், மதத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் எந்த அதிகாரப்பூர்வ தரவுகளும் இல்லை.

தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "2014ஆம் ஆண்டு தேர்தலில் வயநாடு மக்களவை தொகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 12,47,326 ஆக இருந்தது. தற்போது அது அதிகரித்துள்ளது. ஆனால், இந்து அல்லது முஸ்லிம் வாக்காளர்கள் என்று தனித்தனியே தேர்தல் ஆணையம் கணக்கில் எடுப்பதில்லை" என்றார்.

வயநாடு தொகுதியின் இந்து - முஸ்லிம் தரவுகள்

மக்களவை தொகுதிகளில், மத அடிப்படையிலான தகவல்களை டேடாநெட் என்ற தன்னிச்சையான அமைப்பு ஒன்று வைத்துள்ளது.

மதிப்பீட்டு அடிப்படையிலேயே, அவர்களின் தரவுகள் இருப்பதாக அந்த அமைப்பின் இயக்குநர் ஆர்கே துக்ரல் தெரிவித்தார்.

அவரது ஆய்வுபடி, வயநாடு மக்களவை தொகுதியில் உள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சமமாக இருப்பதாக கூறுகிறார்.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் 40-45 சதவீதம் வரை இருப்பதாகவும், கிறிஸ்தவர்கள் சுமார் 15 சதவீதம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டேடாநெட் அமைப்பின் மதிப்பீட்டை பிபிசியால் தன்னிச்சையாக உறுதிபடுத்த முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :