You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
90s kids வதந்திகள் : ''முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துவிடும் என நம்பினோம்''
ட்விட்டரில் நேற்று பகலில் சென்னை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது #90sKidsRumours எனும் ஹேஷ்டேக். பின்னர் நேற்று இரவு இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது இந்த ஹேஷ்டேக்.
1990 களில் குழந்தைகளாக இருந்தவர்களை தங்களது பருவத்தில் தாங்கள் நம்பிய வதந்திகளை பொது வெளியில் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த ஹேஷ் டேக் உருவாக்கப்பட்டிருந்தது. நகைச்சுவையோடு அவை பகிரப்பட்டாலும் இந்தியாவில் எந்த அளவுக்கு மூட நம்பிக்கைகள் மற்றும் பாலியல் கல்வி இல்லாததால் உண்டான தவறான புரிதல்கள் இருந்தன என்பதை அவை வெளிக்காட்டின.
இது குறித்து பிபிசியின் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் நேயர்கள், தாங்கள் சிறுவயதில் கேள்விப்பட்ட வதந்திகள் என்னென்ன என கேட்டோம். அதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
''இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது என்ன சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது. இல்லையெனில் பேய் அடித்துவிடும்'' எனும் வதந்தியை குறிப்பிட்டுள்ளார் சாரதி எனும் நேயர்.
''பொண்ணுங்க பக்கத்தில் உக்கார வைக்குறதெல்லாம் தண்டனை என நம்பின காலம் உண்டு'' என்கிறார் ஞனணேஷ்
''தண்டவாளத்தில் வாழைப்பழம் வைத்தால் ரயில் கவிழ்ந்து விடும்'' என்றார்கள் என்கிறார் தினேஷ் நடேசன்.
''எல்லாத்தையும் விட ஒரு பெரிய அப்பாவித்தனம் என்னவென்றால் தியேட்டர் வெள்ளை திரைக்கு பின்னாடி ஒரு உலகமே இருக்குன்னு நம்பி ஏமாந்தேன். அதில் நெருப்பு எரிந்தால் தியேட்டரே பற்றிக்கொள்ளும் என பயந்தது. படத்தில் இறப்பவர் உண்மையாகவே இறந்து விடுவார் என நினைத்தது'' என குறிப்பிட்டுள்ளார் சங்கீதா ஸ்ரீ.
மயிலிறகு குட்டி போடும் என நம்பி அதற்கு உணவாக பென்சில் சீவல், விபூதி போட்டது வதந்தியால் ஏற்பட்டது என்கிறார் ஜீவா லட்சுமண்.
''ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தொண்டையில் சதை வளரும் என சொல்வாங்க'' என்கிறார் ராம் வெங்கடேஷ்.
''முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்தால் குழந்தை பிறக்கும் என்பதுதான் நான் நான் சிறிய வயதில் கேட்டு ஏமாந்தது'' என்கிறார் விஷ்ணு அன்பு.
2000-ல் உலகம் அழிந்து விடும் என நம்பியது பெரிய வதந்தி என்கிறார் தேவி லட்சுமி. இதே கருத்தை அப்துல்லா கமல் பாட்சா போன்ற பலரும் தெரிவித்துள்ளனர்.
''பல் விழுந்துவிட்டால் கூரை மேல் போட்டுவிடவேண்டும். இல்லையெனில் பல் முளைக்காது என கூறினார்கள். நானும் எல்லா பல்லையும் கூரை மேல் போட்டுவிடுவேன்'' என வெங்கடேசன் வெங்கி எனும் நேயர் கூறியுள்ளார்.
சக்திமான் உண்மையாகவே காப்பாற்ற வருவார் என மரத்தில் இருந்த குதித்ததாக குறிப்பிடுகிறார் அரி அரி எனும் நேயர்.
''பொன்வண்டை தீப்பெட்டிக்குள் ஒரு ரூபாயுடன் அடைத்து வைத்து மறுநாள் பார்த்தால் 10 ரூபாயாக மாறியிருக்கும் என்பது வதந்தி'' என்கிறார் சக்திவேல் ஆறுமுகம்.
''சந்திரகிரகணத்தை பாம்பு விழுங்குது அதான் மறையுது என சொன்னதை நம்பினோம்'' என்கிறார் முஜீப்
'' வெயிலும் மழையும் ஒன்றாக வந்தால் காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்குதுனு நம்பியது'' என வதந்தி குறித்து குறிப்பிட்டுள்ளார் செல்வ சுந்தரி .
''நாக்கு கருப்பா இருந்தா சொல்லுறது பழிக்கும்'' என களத்தூர் நஜ்ரு தீன் குறிப்பிட்டுள்ளார்.
''எல்லா பாம்புக்கும் விஷம் இருக்கும் ஆனால் பச்சை பாம்புக்கு மட்டும் விஷம் இருக்காது தெரியுமா'' என வதந்தி நிலவியதாக வங்கதேச தங்கதுரை குறிப்பிடுகிறார்.
'' பொறியியல் படித்தால் வேலை கிடைக்கும் என சொன்னார்கள். அந்த வதந்தி இன்னமும் தொடர்கிறது'' என கிண்டலுடன் வதந்தி குறித்து பிபிசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜீவா.
மக்கள் ஏன் வாயுவை வெளியேற்றுகிறார்கள்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :