கொடநாடு கொலை - கொள்ளை: எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டிய இருவர் கைது

பட மூலாதாரம், Getty Images
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக குற்றம்சாட்டிய பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உடன், கடந்த வெள்ளியன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி வந்த தமிழக காவல்துறையின் சிறப்புக் குழு அவர்களைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
தம்மைக் கைது செய்ய தமிழக காவல்துறையினர் டெல்லி வந்துள்ளதாகவும் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தமது ஊடக நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக மேத்யூ சாமுவேல் ஃபேஸ்புக் பதிவொன்றில் கூறியுள்ளார்.
"அந்தக் கொலைகளின் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக, தம் நிலையை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்," என்றும் மேத்யூ அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
"டெல்லியில் உள்ள துவாரகாவில் இருந்து, DL3C 7355 என்ற பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த தமிழக காவல்துறையினர் கே.வி.சயான் மற்றும் வி.மனோஜ் ஆகியோரை கட்டாயமாக அழைத்துச் சென்றனர்," என்று இன்னொரு ஃபேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளியன்று டெல்லியில் செய்தியாளர்களை மேத்யூ சாமுவேல் சந்தித்தார். அதிமுகவினர் செய்த முறைகேடுகள் குறித்த ஒப்புதல் வாக்குமூலங்களை, காணொளியாகப் பதிவு செய்து கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா வைத்திருந்ததாகவும், அவற்றைக் கைப்பற்றினால் அமைச்சர்கள் உள்ளிட்டோரைத் தாம் கைப்பற்ற முடியும் என்று எடப்பாடி நினைத்ததாகவும் மேத்யூ கூறியிருந்தார்.

பட மூலாதாரம், FACEBOOK
கொடநாட்டில் கொள்ளை நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் உடனிருந்தனர்.
அப்போது பேசிய சயான், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் தமது நண்பர் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சில முக்கிய ஆவணங்களை எடுக்க கனகராஜ் தங்களை அழைத்ததாகவும், தங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருந்ததாக கனகராஜ் கூறியதாகவும் தெரிவித்தார்.
கனகராஜ், மனோஜ் உள்ளிட்ட 11 பேர் அங்கு சென்று, அவர்களில் நான்கு பேர் உள்ளே சென்றபின், கனகராஜ் சில ஆவணங்களை எடுத்ததாகவும் சயான் கூறினார்.

பட மூலாதாரம், mathew samuel/ facebook
2017 ஏப்ரலில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கனகராஜ் மரணடைந்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு ஊடகங்களில் ஒளிபரப்பான பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தம்மைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சென்னை சைபர்கிரைம் பிரிவு போலீசார் அவதூறு செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சயான் உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு உள்ளாகவும், ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவும் தயாராக இருப்பதாக டெல்லியின் இன்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், dipr
இதனிடையே, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே ஓட்டுனர் கனகராஜ் தங்களது உதவியை நாடியதாக சயான் பேட்டியில் கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எப்படி தொடர்பு படுத்தமுடியும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், " மறைந்த முதல்வர் ஜெயலலிதா யாரையும் மிரட்டி பனியவைத்தில்லை , கொடநாட்டில் எந்த ஆவணமும் எடுத்ததாக தகவல் இல்லை என்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்கவே அவர்கள் சென்றுள்ளனர் என்றும் ஓட்டுனர் கனகராஜின் நடவடிக்கைகளை கவனித்தால், கொடநாட்டில் உள்ள இடங்களை கண்காணித்து கொள்ளையடிக்க கேரள கொள்ளையர்களுடன் இணைந்திருக்கலாம்," என்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"ஒன்றோடு ஒன்று முடிச்சுபோட்டு திட்டமிட்டு அவதூறு பரப்ப்படுகின்றது என்றும், வழக்கு நடைபெற்று வரும்போது இதனை வெளியே சொல்லியிருக்கலாமே. தேர்தலை கருத்தில்கொண்டு இதனை பரப்பி வருகின்றனர் என்றும் யார் அவதூறு பரப்பினாலும் நாங்கள் மறுப்போம். அதனை எதிர்கொள்வோம்," என்றும் தெரிவித்தார்.
"2ஜி வழக்கில் விசாரிக்கப்பட்ட, திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த சாதிக் பாட்ஷா என்பவர் இறந்தது கொலையா தற்கொலையா என்று தெரியவில்லை. அவர் இறப்புக்குப் பிறகே அந்த வழக்கு திசை மாறியது," என்றும் செம்மலை கூறினார்.
நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் முதலமைச்சர் பதவி விலகி, கொடநாடு கொலை-கொள்ளை குறித்து சயான் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்க வேண்டும் என்றும், முதல்வரின் கீழ் செயல்படும் சென்னை காவல் ஆணையரகம், இதில் நேர்மையான விசாரணை நடத்துவது சந்தேகம் என்றும் ராசா கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












