You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்' : தெலுங்கில் ட்வீட் செய்த பிரதமர் மோதி
ஒவ்வொருவரும் தங்களின் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் முக்கியமாக இளைஞர்கள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெலுங்கு மொழியில் அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடக்க இன்னும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், தற்போது ஐந்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான, ஓர் அரையிறுதிப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
மத்தியபிரதேசம், சத்திஸ்கர், மிசோராம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் மாதம் வாக்குப்பதிவு நடந்த நிலையில், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடந்தது.
வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய தெலங்கானா சட்டசபை தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்தன. பகல் வரை வரை 47.8 சதவீத வாக்குகள் பதிவாகின.
32,574 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது,. மொத்தம் 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர்.
தெலங்கானாவில் சட்டம் ஒழுங்கு முறையாக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் வாராங்கல் மாவட்டத்தில் வாக்களிக்க வரிசையில் நின்ற 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாக்களிக்க சென்ற பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தன்னிடம் வாக்காளர் அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லாததால், வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பியதாக ஐபிஎஸ் அதிகாரியான கிருஷ்ண பிரசாத் ட்வீட் செய்துள்ளார்.
அதே போல தன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என பேட்மின்டன் வீராங்கனை கட்டா ஜ்வாலா ட்வீட் செய்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :