You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஜ புயல்: "கால்நடைகள் இல்லை, அவை குடும்ப உறுப்பினர்கள்" - துயரில் மக்கள்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சூறையாடிய கஜ புயலின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கஜ புயலின் கோரதாண்டவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. வீடு, கால்நடைகள் மற்றும் தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.
வேதராண்யம், திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, உள்பட பல ஊர்கள் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பதால், மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம் தாலுகா தகட்டூர், அரைக்கால்கரை, பெத்தாச்சிக்காடு உள்ளடக்கிய பதினெட்டு பட்டி கிராமங்களில் உள்ள மக்கள் அதிகளவில் முரா, சுருடலடை, நாட்டு எருமைகள் ஆகிய இனங்களை சேர்ந்த மாடுகளையும், வெள்ளாடு, ஜமுனாபாரி, செம்மறி ஆகிய ஆடுகள் மற்றும் நாட்டுக் கோழிகளை அதிகளவில் வளர்த்து வந்துள்ளனர்.
கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட கஜ புயலால் கால்நடைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அப்பகுதிகளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மாடுகள், 250க்கும் மேற்ப்பட்ட ஆடுகள் மற்றும் ஏராளமான கோழிகள் ஆகிய கால்நடைகள் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகள் அனைத்தும் இரவு நேரத்தில் கொட்டகையில் கட்டி இருந்த போது புயலில்மாட்டிக்கொண்டது. மேலும் சூறைகாற்றில் சிக்கி நூற்றக்கும் மேற்ப்பட்ட கோழிகளை காணவில்லை.
மிகுந்த பொருளாதார சிரமங்களுக்கிடையே வளர்த்த கால்நடைகள் அனைத்தும் கண் முன்னே இறந்து போனது மிகுந்த வேதனையளிப்பதாக கண்ணீருடன் தெரிவித்தார் புயலில் மாடுகளை இழந்த பூங்கொடி.
"நள்ளிரவு ஏற்பட்ட திடீர் புயல் மற்றம் சூறைக் காற்றால் மாட்டுப் பட்டி திடீரென இடிந்து விழுந்தது. அதில் கட்டியிருந்த 15 மாடுகளும் இறந்தது. கோழிகள் அனைத்தும் எங்கே சென்றன என்று தெரியவில்லை" என்கிறார் அவர்.
"கால்நடைகளை குடும்ப உறுப்பினர்களை போல் வளர்த்தோம். ஒரே நேரத்தில் இவை அனைத்தும் போனது மனதுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது" என்கிறார் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி.
இந்த பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தங்கள் கால்நடைகளையே நம்பியிருந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட புயலால் அவை அனைத்தையும் இழந்துள்ளதால் தங்களின் வாழ்வாதாரமே நிலைகுலைந்து போனது என்கின்றனர் இவர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :