You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்: 'ராமர் கோயில் கட்டுவதற்கு சட்டம் வேண்டும்'
சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்
தினத்தந்தி - செல்பேசிக்கு பதிலாக செங்கல்
மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்தை சேர்ந்த கஜானன் காரத், செல்போன் வாங்க ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றின் இணையதளத்தில் கடந்த 9ஆம் தேதி முன்பதிவு செய்தார். இதற்கான தொகையையும் அவர் இணையம் மூலமாகவே செலுத்தினார்.
ஆனால், கடந்த 14ஆம் தேதி அவருக்கு வந்த பார்சலில் செல்பேசிக்கு பதிலாக செங்கல் வந்துள்ளது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'ராமர் கோயிலுக்கு சட்டம் வேண்டும்'
அயோத்தியில் உள்ள பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
அயோத்தி நிலப் பிரச்சனை குறித்த வழக்கு இந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமது முடிவை உச்ச நீதிமன்றமும் விரைவில் அறிவிக்க வேண்டும் என பகவத் வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதி வழங்கிய தீர்ப்பு பாரம்பரியத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தி இந்து - இந்தியாவுக்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகள்
ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில், இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் நுழைய முயன்றதை தடுத்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் ராணுவத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் உடல்களை தேடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :