பத்திரிகையாளர் 'நக்கீரன்' கோபால் கைதாகி விடுதலை

நக்கீரன் கோபால்

பட மூலாதாரம், Facebook

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் 'நக்கீரன்' கோபாலை சிறையில் அடைக்க எழும்பூர் 13ம் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இன்று செவ்வாய்கிழமை காலை, வாரம் இரு முறை வெளிவரும் செய்தி இதழான நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

நக்கீரன் இதழில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்து வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஏப்ரல் வெளியான நக்கீரன் இதழில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்து அட்டைப்படக் கட்டுரை ஒன்று வெளியானது.

அந்தக் கட்டுரையில், கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு செல்லத் தூண்டியதான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவி, ஆளுநரைச் சந்தித்ததாகக் கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், செவ்வாய்க் கிழமையன்று புனேவுக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு கோபால் வந்தார்.

அப்போது அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கைதுசெய்வதாகத் தெரிவித்தனர். இதற்குப் பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு கோபால் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

Presentational grey line
Presentational grey line

கோபால் கைதுசெய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட வைகோ சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து, அவரைச் சந்திக்க வேண்டுமெனக் கூறினார்.

ஆனால், அதற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் காவல் நிலையம் முன்பாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வைகோ கைதுசெய்யப்பட்டார். 

சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையம்

கோபால் கைதுசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

"பேராசிரியை விவகாரத்தில் "தொடர்" ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார - பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் - பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்.

தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது" என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

ஸ்டாலின்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸும் இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

கோபால் மீது என்ன புகார் அளிக்கப்பட்டது, எந்தப் பிரிவின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன என்ற விவரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :