நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட திருமுருகன் காந்தி மீண்டும் கைது

பெங்களூரு விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைதுசெய்ய முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரை வேறொரு வழக்கில் மீண்டும் சென்னை நகர காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த ஜூன் மாத இறுதியில் தேசத்திற்கு எதிராகப் பேசிய விவகாரத்தில் திருமுருகன் காந்தி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்பதால், அவர் எவ்வழியாக இந்தியா திரும்பினாலும் கைது செய்ய எல்லா விமான நிலையங்களுக்கும் அறிவிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜெனீவாவுக்குச் சென்றிருந்த திருமுருகன் காந்தி, துபாய் வழியாக நேற்று பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது, அவரை விமான நிலைய காவலர்கள் கைது செய்தனர்.

அதற்குப் பிறகு நேற்று இரவு 10.30 மணியளவில் அவர் சென்னையிலிருந்து சென்ற தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் சென்னை கொண்டுவரப்பட்ட அவர் சைதாப்பேட்டை 11வது நீதிமன்ற நடுவர் பிரகாஷ் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு எதிராகப் பேசிய வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ததால் வழக்குப் பதிவுசெய்திருப்பதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவுடன் திருமுருகன் காந்தி மீண்டும் கைது

அப்போது வாதிட்ட திருமுருகன் காந்தி தரப்பு வழக்கறிஞர், அந்த வீடியோவைத் தாங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லையென்றும் ஐ.நா. அமைப்புதான் பதிவேற்றம் செய்தது என்றும் தெரிவித்தனர்.

உடனே நீதிபதி காவல்துறையினரைப் பார்த்து, ஜூன் மாதம் பதிவுசெய்த வழக்கிற்கு இப்போது ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பிறகு, திருமுருகன் காந்தியை போலீஸ் காவலில் விசாரிக்க ஒரு நாள் மட்டும் அவகாசம் தருவதாகவும் நீதிமன்றக் காவலில் ரிமாண்ட் செய்ய முடியாது என்றும் நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து எழும்பூரில் உள்ள பழைய காவல்துறை ஆணையர் வளாகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட திருமுருகன் காந்தி வெள்ளிக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் தன் உடமைகளுடன் பழைய ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்தபோது, அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீண்டும் அவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது திருமுருகன் காந்தியுடன் வந்தவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய இலங்கையில் போராட்டம்

பிறகு வலுக்கட்டாயமாக காவல் துறை வாகனத்தில் ஏற்றப்பட்ட திருமுருகன் காந்தி தற்போது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கைது செய்து வைக்கப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டில் சிறையிலிருந்து வெளிவந்த திருமுருகன் காந்தி, தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கச் சென்றபோது அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :