You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சேலம் எட்டு வழிச்சாலை: எங்கு சென்றாலும் காவல்துறையினர்; அச்சத்தில் கிராம மக்கள்
சேலம் சென்னை செல்லும் வழியிலுள்ள சீலனாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியிலிருந்து 8வழி விரைவு பாதைகளுக்காக குறிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியில் 20 அடிக்கு ஒரு காவல் துறையினரோ அல்லது காவல்துறையினரின் வாகனமோ நிறுத்தப்பட்டுள்ளது.
எங்கள் பெயர் வேண்டாம், பதறும் விவசயிகள்
சராசரி விவசாயிகளான எங்களின் நிலை குறித்து யாரிடம் சொல்ல? என்கின்றார் இவ்வழி தடத்தில் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள். பெயரை சொல்லக் கூடாது என்ற நிபந்தனைகளை விதித்தபடியே பலரும் பேசுகின்றனர். பாதுகாக்க வேண்டிய எங்களை பற்றி மத்திய அரசிடம் பேசாமல், எங்களுக்கு காவல் வைத்தது சரியா என கேள்வி எழுப்புகின்றனர் இதுகுறித்து பேசிய விவசாயிகள்.
பசியாற்றுபவரா? பதட்டத்தை உருவாக்குபவரா?
காலனி பேருந்துநிறுத்தம்,தாசனாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம், நிலவரப்பட்டி ,நாழிக்கல்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கலககாரர்களை அடக்கும் ’RIOT’ காவல்துறை வாகனங்கள், இரண்டு பேருந்து நிறைய காவல்துறையினர், மற்றும் காவல் அதிகாரிகள் பலர் நிறுத்தப்பட்டுள்ளனர் அது மட்டுமில்லாமல், சிறிய மலைகிராமமான எங்கள் கிரமத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு செல்லும் போது பரிசோதனை செய்கின்றனர் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் நம்மிடம் பேசுகையில், "அருகிலுள்ள கடைகளுக்கு கூட செல்ல இயலவில்லை, எங்கு சென்றாலும் இரு காவல் துறையினர் நிற்பது பயத்தை தருகிறது. ஒவ்வொரு கிராமங்களிலும் இரு சக்கர வாகனங்களில் 2 காவல்துறையினர் என நாளொன்றுக்கு மூன்று முறை சராசரியாக வருகின்றனர்." என்று தெரிவித்தார்.
காவல்துறை அன்றும் இன்றும்
"சேலத்தில் நடைபெற்ற அன்புமணி ராமதாஸின் கருத்து கேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய எங்கள் கிராமத்தினரை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்தனர். இதே காவல்துறையை சேர்ந்தவர்கள் சிறிது காலங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் இவ்வாறு கூட்டம் சேர்த்து, கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்றால் வண்டியை நிறுத்தி, இவ்வாறான லாரிகளில் நின்று கொண்டு பயணம் செய்வது தவறு, என கண்டித்து அனுப்பவார்கள். அனால் இன்றோ நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது என புலம்பியதோடு உங்கள் வாகனத்தை தொடர்ந்து காவல் துறை வாகனம் வந்ததே கவனிக்கவில்லையா" என்று கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களுக்குமா இந்நிலை என்றும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
அரசிடம் நடக்கவில்லை என்று கடவுளிடம் வேண்டுதல்
எட்டு வழி சாலை வரக்கூடாது என அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; எட்டுவழி சாலையில் அம்மன் கோவில் இருந்த இடம் தப்பித்தது; எனவே அதேபோல் தங்கள் இடங்களையும் மீட்டு தரும்படி அம்மனிடம் முறையிட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்