You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நீதிபதியை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழக சட்டப்பேரவையின் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் மூன்றாவது நீதிபதியை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மூன்றாவது நீதிபதியாக எஸ். விமலா அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீதியரசர் எம். சத்யநாராயணா மூன்றாவது நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதின்றத்தின் டிவிஷன் அமர்வு விசாரித்துவந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய இந்த அமர்வு ஜூன் 14ஆம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது, இரு நீதிபதிகளும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற வகையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் தகுதி நீக்க உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தரும் தங்கள் தீர்ப்புகளில் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக எஸ். விமலா அறிவிக்கப்பட்டார். ஆனால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றி உச்ச நீதிமன்றமே விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க வேண்டுமெனக் கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 17 பேர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச் செல்வன் இதில் இணைந்துகொள்ளவில்லை.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷண் கவுல் அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், புதிய நீதிபதி நியமனம் குறித்து வாட்ஸப் மூலமே தெரியவந்ததாகக் கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், 17 சட்டமன்ற உறுப்பினர்களும் தாக்கல் செய்த மனு சரியானதல்ல; அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் வேண்டுமானால், வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றலாம் என தெரிவித்தனர்.
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பு, தங்கள் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. ஆகவே இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட எஸ். விமலாவுக்குப் பதிலாக எம். சத்யநாராயணா விசாரிப்பார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அப்போதைய பொறுப்பு ஆளுனர் சி. வித்யாசாகர் ராவைச் சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த 19 பேரிடமும் விளக்கம் கேட்டு அ.தி.மு.கவின் கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். இவர்களது செயல், தானாக முன்வந்து அ.தி.மு.கவின் உறுப்பினர் தகுதியிலிருந்து வெளியேறுவதற்குச் சமம் என்பதால் இந்த 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேந்திரன் சபாநாயகரிடம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று கோரினார்.
இவர்களில் எஸ்.டி.கே. ஜக்கையன் பிறகு ஆளும் பிரிவுக்கு ஆதரவாளராகி விட்டார். செப்டம்பர் 17ஆம் தேதியன்று சபாநாயகரைச் சந்தித்த அவர், டிடிவி தினகரன் தரப்பினர் தன்னை வற்புறுத்தி ஆளுனரை சந்திக்க அழைத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, மீதமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் செப்டம்பர் 18ஆம் தேதியன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 1986ஆம் ஆண்டு விதிகளின்படியும் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படியும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை அடுத்து, தமிழக சட்டமன்ற உறுப்பினர்களில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்த தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), ஆர். முருகன் (அரூர்), எஸ். மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), கே. கதிர்காமு (பெரியகுளம்), சி. ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), பி. பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), வி. செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), எஸ். முத்தைய்யா(பரமக்குடி), பி. வெற்றிவேல் (பெரம்பூர்), என்.ஜி. பார்த்திபன் (சோளிங்கர்), எம். கோதண்டபாணி (திருப்போரூர்), டி.ஏ. ஏழுமலை (பூந்தமல்லி), எம். ரங்கசாமி (தஞ்சாவூர்), ஆர். தங்கதுரை (நிலக்கோட்டை), ஆர். பாலசுப்பிரமணி (ஆம்பூர்), எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன் (சாத்தூர்), ஆர். சுந்தர்ராஜ் (ஓட்டப்பிரடாரம்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தத் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி எம். துரைசாமி, மறு உத்தரவு வரும் வரை இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என செப்டம்பர் 20ஆம் தேதியன்று இடைக்காலத் தடைவிதித்தார்.
இதற்குப் பிறகு இந்த வழக்கு நீதிபதி கே. ரவிச்சந்திரபாபுவுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த வழக்குகளில் அரசியல் சாஸனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இருப்பதால் வழக்கு டிவிஷன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு வழக்கு சுமார் மூன்று மாதங்கள் விசாரிக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியன்று வழக்கின் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் தற்போது ஆளும் எடப்பாடி கே. பழனிச்சாமி பிரிவுக்கு சபாநாயகர் தவிர, 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. தி.மு.க. 89 உறுப்பினர்களையும் காங்கிரஸ் எட்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றன. டிடிவி தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்றிருக்கிறார். 18 இடங்கள் காலியாக உள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்