18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படவிருக்கிறது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டுவந்தது. ஜனவரி 23ஆம் தேதியன்று வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் சுமார் ஒன்றரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவு செல்லுமென அறிவித்தார். அதே அமர்வின் சக நீதிபதியாக இருந்த சுந்தர், சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என அறிவித்தார்.

இரு நீதிபதிகளின் தீர்ப்பும் முரண்பட்டிருப்பதால், வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படவிருக்கிறது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியும் ஒரு நீதிபதியாக இருப்பதால், தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் உள்ள ஹுலுவாடி ரமேஷ் அந்த மூன்றாவது நீதிபதி யார் என்பதை முடிவுசெய்வார்.

இரு நீதிபதிகளும் இப்படி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும் 18 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "இந்த தீர்ப்பின் மூலம் அரசின் ஆட்சி இன்னும் சில மாதங்கள் நீள்வது வருத்தமளிக்கிறது. இந்தத் தீர்ப்பை தமிழகம் முழுவதும் எதிர்பார்த்தார்கள். இந்தத் தீர்ப்பால், மக்களிடம் நீதிமன்றம் குறித்து கேள்விக்குறி எழுந்திருக்கிறது" என்று தெரிவித்தார்.

"இரு நீதிபதிகளும் எங்களுக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தால்கூட உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வெற்றிபெற்றிருப்போம். இப்போது இதே நிலை நீடிக்கவிருக்கிறது. எல்லாத் தரப்பினரும் இந்த அரசால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்" என்று கூறிய தினகரன், தனக்கு ஆதரவாக உள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து தனக்கு ஆதரவாகவே உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பில் இரு நீதிபதிகளும் முரண்பட்டிருப்பதால் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் முன்பிருந்த நிலையே நீடிக்கவிருக்கிறது

வழக்கின் பின்னணி என்ன?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அப்போதைய பொறுப்பு ஆளுனர் சி. வித்யாசாகர் ராவைச் சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த 19 பேரிடமும் விளக்கம் கேட்டு அ.தி.மு.கவின் கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். இவர்களது செயல், தானாக முன்வந்து அ.தி.மு.கவின் உறுப்பினர் தகுதியிலிருந்து வெளியேறுவதற்குச் சமம் என்பதால் இந்த 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேந்திரன் சபாநாயகரிடம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று கோரினார்.

இவர்களில் எஸ்.டி.கே. ஜக்கையன் பிறகு ஆளும் பிரிவுக்கு ஆதரவாளராகி விட்டார். செப்டம்பர் 17ஆம் தேதியன்று சபாநாயகரைச் சந்தித்த அவர், டிடிவி தினகரன் தரப்பினர் தன்னை வற்புறுத்தி ஆளுனரை சந்திக்க அழைத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, மீதமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் செப்டம்பர் 18ஆம் தேதியன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 1986ஆம் ஆண்டு விதிகளின்படியும் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படியும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை அடுத்து, தமிழக சட்டமன்ற உறுப்பினர்களில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்த தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), ஆர். முருகன் (அரூர்), எஸ். மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), கே. கதிர்காமு (பெரியகுளம்), சி. ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), பி. பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), வி. செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), எஸ். முத்தைய்யா(பரமக்குடி), பி. வெற்றிவேல் (பெரம்பூர்), என்.ஜி. பார்த்திபன் (சோளிங்கர்), எம். கோதண்டபாணி (திருப்போரூர்), டி.ஏ. ஏழுமலை (பூந்தமல்லி), எம். ரங்கசாமி (தஞ்சாவூர்), ஆர். தங்கதுரை (நிலக்கோட்டை), ஆர். பாலசுப்பிரமணி (ஆம்பூர்), எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன் (சாத்தூர்), ஆர். சுந்தர்ராஜ் (ஓட்டப்பிரடாரம்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தத் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி எம். துரைசாமி, மறு உத்தரவு வரும் வரை இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என செப்டம்பர் 20ஆம் தேதியன்று இடைக்காலத் தடைவிதித்தார்.

இதற்குப் பிறகு இந்த வழக்கு நீதிபதி கே. ரவிச்சந்திரபாபுவுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த வழக்குகளில் அரசியல் சாஸனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இருப்பதால் வழக்கு டிவிஷன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு வழக்கு சுமார் மூன்று மாதங்கள் விசாரிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியன்று வழக்கின் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் தற்போது ஆளும் எடப்பாடி கே. பழனிச்சாமி பிரிவுக்கு சபாநாயகர் தவிர, 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. தி.மு.க. 89 உறுப்பினர்களையும் காங்கிரஸ் எட்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றன. டிடிவி தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்றிருக்கிறார். 18 இடங்கள் காலியாக உள்ளன.

அ.தி.மு.கவுக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் அறந்தாங்கி தொகுதியின் ஈ. ரத்தினசபாபதி, விருதாச்சலம் தொகுதியின் வி.டி. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் ஏ. பிரபு ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளதாகக் கருதப்படுகிறது. தவிர, அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ். கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தங்களது நிலைப்பாட்டை இதுவரை தெளிவாகத் தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :