ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு பாதிப்பை ஏற்படுத்துமா? பேராசிரியர் கருத்து

பட மூலாதாரம், VEDANTA
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட ரசாயனக் கழிவு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கடந்த மே 22ஆம் தேதி மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது அதற்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் 17ஆம் தேதி இரவு அந்த ஆலையில் வைக்கப்பட்டிருந்த கந்தக அமில கிடங்கில் இருந்து கசிவு ஏற்பட்டதை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதி செய்தார்.
மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அவர் கூறினார்.
கந்தக அமிலம் என்றால் என்ன?
கந்தக அமிலத்தைவிட (Sulphuric Acid) வேறு கடுமையான அமிலம் கிடையாது என்கிறார், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ரசாயன பொறியியல் துறையின் முன்னாள் பேராசிரியர் மோகன்.
கந்தக அமிலம் என்பது விஷத்தன்மை வாய்ந்தது. எந்த உலோகத்தையும் துருப்பிடிக்க வைக்கும் தன்மை இதற்கு உண்டு.
இந்த அமிலம் கையில் பட்டாலே உயிரணுக்களை (cells) எல்லாம் அரித்துவிடும். அமிலம் பட்ட இடத்தில் தோல்கூட இருக்காது என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
அதே போல, சல்ஃபர் ட்ரை ஆக்சைட் (SO3) மிக அதிக அளவிலான அரிப்புத் தன்மை கொண்டது. இது வளிமண்டலத்தில் கலக்கும் பட்சத்தில், மழை பொழியும் நேரத்தில் அமில மழையாக (Acid Rain) பொழிகிறது. இது சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
கந்தக அமிலத்தில் இருந்து வாயு கசிந்து, அதை முகர்ந்தால் மூச்சுத் திணறல் ஏற்படும். இது எப்படி நடக்கிறது?
கந்தக அமிலம் வாயு நிலையில் இருக்கும்போது வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலும் உறிஞ்சும் தன்மையுடையது.
இதனை மக்கள் முகர்ந்தால், மூக்கில் உள்ள ஈரப்பதத்தை அந்த வாயு உறிஞ்சிவிடும். அதனால்தான் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. பின்பு இது அமிலமாக மாறி, உயிரணுக்களை அரித்துவிடும்.
காப்பர் தயாரிப்பதில் கந்தகத்தின் பங்கு என்ன?
ஸ்டெர்லைட் ஆலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் எந்த வகையை சேர்ந்தது என்று தெரியவில்லை என்று குறிப்பிடும் பேராசியர் மோகன், இந்த அமிலம் தொழிற்சாலையில் பல்வேறு வகையில் பயன்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறார்.
காப்பரை பிரித்தெடுக்கும் போது, அதில் உள்ள மற்ற பொருட்களை நீக்குவதற்கு பயன்படுத்தலாம். மூலப் பொருட்களை கரைக்க பயன்படுத்தப்படலாம்.

பட மூலாதாரம், Reuters
ஆனால், அந்த ஆலையின் நடைமுறைகளை தெரிந்து கொள்ளாமல் எதையும் உறுதியாக கூறமுடியாது என்று மோகன் தெரிவித்தார்.
அமில கசிவால் மக்களுக்கு பாதிப்பு இல்லையா?
ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள அமில கசிவால், மக்களுக்கு ஆபத்து இல்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்கிறார் பேராசியர் மோகன். "அங்குள்ள மக்களுக்கு இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து முழுமையாக தெரியுமா என்று தெரியவில்லை. கந்தக அமிலத்தை பொறுத்தவரை மிகப் பாதுகாப்புடனே கையாள வேண்டும். கசிவு ஏற்பட்டதை நாம் அறிவதற்குள்ளாகவே பல பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்" என்று மோகன் தெரிவித்தார்.
''ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, மூன்று நாட்கள் கழித்து அதை வந்து பார்த்தால் அங்கு தண்ணீர் இருக்காது. காற்றுடன் கலந்து ஆவியாகிவிடும் என்பது எதார்த்தம். ஆனால், திரவநிலையிலுள்ள கந்தக அமிலம் கிடங்கில் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ளதெனில் அங்கே திரவம் ஆவியாக மாறும்போது அழுத்தம் அதிகரிக்கும்" என்று அவர் விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"அழுத்தம் அதிகரிக்கும் போது, அமிலம் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பகுதியில் வாயு வெளியேற முயற்சிக்கும். இப்படித்தான் கசிவு ஏற்படுகிறது. தொடர்ச்சியாக அமிலத்தை பயன்படுத்தி வந்தால் பிரச்சனை இல்லை. பயன்படுத்தவில்லையெனில் கந்தக அமிலம் தேவைப்படும் மற்ற தொழிற்சாலைகளுக்கு அதனை வழங்கி விடலாம்''.
பெரும்பாலான தொழிற்சாலைகளில் கந்தக அமிலத்தின் தேவை உள்ளதெனவும் தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால், இவை முறையாக கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகிறதா என்பது தெரியவில்லை எனவும் பேராசியர் மோகன் குறிப்பிடுகிறார்.
உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்
அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை வந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பேராசிரியர் மோகன் அறிவுறுத்துகிறார்.
உடலில் உள்ள உயிரணுக்கள் பாதிப்படைந்தால் பின்பு அதிக சிகிச்சை தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறுவது என்ன?
ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், நிர்வாகிகள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கிறார் பிபிசியிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆலையின் மக்கள் தொடர்பு அதிகாரி சாஜன்.
சிறிய அளவிலே கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், பெரிய ஆபத்து ஏதுமில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியதை கேட்டதாக குறிப்பிடும் சாஜன், நிர்வாகம் தரப்பில் யாருக்கும் இது தொடர்பாக அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

அமில கசிவை சீர் செய்யும் பணி தொடக்கம்
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவை சீர் செய்யும் பணி விரைவில் முடியும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட கந்தக அமில கசிவை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பிபிசியிடம் கூறிய அவர், அனைத்து அமிலமும் முழுமையாக நீக்கப்படும் என்றார்.
ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை அகற்ற டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பிற செய்திகள்:
- உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க ஓர் எளிய வழி
- தொடரும் வர்த்தக போர்: சீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு - டிரம்ப் அச்சுறுத்தல்
- மணமகளின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெறாத விநோதம்
- அமெரிக்காவில் 'டோலிவுட் செக்ஸ் ராக்கெட்': குற்றச்சாட்டில் சிக்கிய நடிகைகள்
- 'துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியவில்லை' - ஏரியில் இறங்கி போராடிய மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












