காவிரி வழக்கு: மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்றம்

காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான வரைவுத் திட்டத்தை வரும் மே 14ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

"நீங்கள் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளீர்கள். எனவே, பிப்ரவரி 16ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பை அமல்படுத்தும் வகையிலான வரைவுத் திட்டத்தை வரும் மே 14ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுங்கள்" என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், வரைவுத் திட்டம் தயாராக உள்ளதாகவும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே தேதியில், மத்திய நீர் வளத்துறையின் செயலர் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மே 3-க்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், நீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்தைவிட கூடுதலாக இரண்டு வார காலம் அவகாசம் கோரி கடந்த ஏப்ரல் 27 அன்று மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: