You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நான் துரத்திய ஒரே ஆண்மகன் 'பேட்மேன்' முருகானந்தம்தான் : ட்விங்கிள் கன்னா
மலிவு விலையில் சேனிடரி நேப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் சாதனையை தழுவி எடுக்கப்பட்ட பாலிவுட் திரைப்படம் 'பேட்மேன்' நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இச்சூழலில், படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அக்சய் குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கன்னா, 'பேட்மேன்' உருவாக்கம் குறித்து பிபிசியிடம் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஒரு பழமைவாத குடும்ப பின்னணியிலிருந்து வந்த ஒருவர் எப்படி முற்போக்கு ரீதியாக யோசித்தார் என்பதை நினைத்து தான் உண்மையில் கவர்ந்திழுக்கப்பட்டதாக லண்டன் பிபிசி தலைமையகத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ட்விங்கிள் கன்னா.
தனது இரண்டாவது புத்தகத்தை எழுதி கொண்டிருந்த போது அருணாச்சலத்தின் கதையை பற்றி கேள்விப்பட்டதாகவும், அவரை சந்திக்க இடைவிடாமல் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அருணாச்சலம் முருகானந்தத்தை சந்திக்க தான் எடுத்த முயற்சிகள் குறித்து விவரிக்கும் ட்விங்கிள், அருணாச்சலத்தை பின்தொடர தான் பெரும் சிரத்தை எடுத்ததாகவும், ஒருவேளை அவர் ஒரு பெண்ணாக இருந்து தான் ஒரு ஆணாக இருந்திருந்தால் தற்போது தான் சிறையில் இருந்திருக்க நேர்ந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதுவரை அருணாச்சலம் முருகானந்தத்தை போன்று எந்தவொரு ஆணையும் இப்படி தான் துரத்தியதில்லை என்று கூறும் ட்விங்கிள், திரைப்படம் எடுப்பதற்கு அருணாச்சலம் பிடிகொடுக்காமல் இருந்ததாகவும், இறுதியாக தான் அவரை நேரில் சந்தித்து வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.
பேட்மேன் திரைப்படத்தில் அருணாச்சலம் முருகானந்தம் கதாபாத்திரத்தில் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ளார். சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகிய இரு நாயகிகள் நடித்துள்ளனர். குணச்சித்தர வேடத்தில் நடிகர் அமிதாப் பச்சனும் நடித்துள்ளார்.
இந்தியாவில் சுமார் 2,800 திரையரங்குகளில் பேட்மேன் வெளியாகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :