You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது தேவையா?: கமல் ஹாசன்
ரஜினியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது தேவையா என இருவருமே யோசிக்க வேண்டியிருக்கிறது என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். தாங்கள் எங்கு சென்றாலும் இந்தக் கேள்வி தங்களைத் துரத்துவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
வார இதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், தாங்கள் இணைந்து தேர்தலைச் சந்திப்பது குறித்த கேள்விக்கு ரஜினி கூறியதைப் போல, "காலம் பதில் சொல்லும்" என்றே தானும் கூறவிரும்புவதாகக் கூறியிருக்கிறார்.
முதலில் தான் கட்சி ஆரம்பிக்க வேண்டும்; பிறகு ரஜினி கட்சியை துவங்க வேண்டும். இருவரும் தங்கள் கொள்கைகள் குறித்து விளக்கங்களைச் சொல்ல வேண்டும்; அவை பொருந்துகின்றனவா என்று பார்க்க வேண்டும். ஆகவே ரஜினியும் தானும் இணைவது குறித்து இப்போது முடிவெடுக்க முடியாது என்று கமல் கூறியிருக்கிறார்.
மேலும் இருவரும் இணைந்து தேர்தலைச் சந்திப்பது தேவையா என்பதை இருவரும் யோசிக்க வேண்டுமென்றும் கமல் கூறியிருக்கிறார்.
ஒரு திரைப்படம் அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை யூகிப்பதைப்போல, இந்த விவகாரத்திலும் அவரவர் மனதில் ஒரு கதை ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு எது நல்லது என்பதை கொள்கைதான் முடிவுசெய்யும் என்றும் அதைவிட்டுவிட்டு பெயர்களை வைத்து விளையாடிக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்:
தங்களுக்குப் பிடித்த நடிகருக்காக ஒரு நாள் கூலியை அப்படியே அள்ளித்தரும் மக்களின் இதயத்தைத் தொட்டால், தங்களுக்குப் பிடித்த தமிழகத்திற்காக வள்ளல்களாகிவிடுவார்கள் என்று கூறியிருக்கும் கமல்ஹாசன், அவர்கள் தலையிலேயே கைவைத்த பிறகு, 'நீ திருடன் என்கிட்ட இருந்துதானே திருடுற, அப்படினா அதில் எனக்கும் கொஞ்சம் கொடு' என்று கை நீட்டத் தொடங்கிவிட்டனர் என்றும் கமல் குற்றம்சாட்டியுள்ளார்.
விரைவில் அரசியல் கட்சியைத் துவங்கவிருப்பதாக அறிவித்திருக்கும் கமல்ஹாசன், வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மக்களைச் சந்திக்கும் பயணத்தை தொடங்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :