You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அம்மன் கனவில் சொன்னதால் சுடிதார் அலங்காரம் செய்தேன்: குருக்கள்
தமிழகத்தில், அம்மன் சிலைக்கு சுடிதார் அலங்காரம் செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட குருக்கள், அம்மன் தனது கனவில் வந்து கூறியதால்தான் அவ்வாறு அலங்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஆலய நிர்வாகத்துக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு அவருக்கு ஆறு கால பூஜை நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இம் மாதம் 2-ஆம் தேதி அன்று அம்மனை தரிசிக்க வந்தவர்கள், அம்மன் நவீன சுடிதார் உடையுடன் சந்தன காப்பு அலங்காரத்தில் இருந்ததைக் கண்டனர்.. இதனை கண்ட பக்தர்கள் ருவாவடுதுறை ஆதீனம் நிர்வாகிகளிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து ராஜு மற்றும் கல்யாண் குருக்கள் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ஆதீன நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ராஜு அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்தது குறித்து ஆதீன கட்டளையரான அம்பலவாண தம்பிரான் கூறும்போது, " ஆகம விதிகள் ஒவ்வொரு கோயிலுக்கும் மாறுபடும். அந்த வகையில் ராஜு குருக்கள் இதற்கு முன்பு சென்னையில் பணியாற்றியுள்ளார். அங்கு இது போன்ற பூஜை முறைகள் நடப்பது போல இங்கும் அம்பாளை குழந்தையாக பாவித்து சுடிதார் அலங்காரமிட்டு பூஜை செய்து விட்டார். இது குறித்து ஆதீன நிர்வாகத்திற்கு புகார்கள் வந்ததால் அவருக்கு பணி நீக்க ஆணை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஏன் இவ்வாறு செய்தார் என விளக்கம் கேட்டும், 90 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது என்றார்.
திருவிடை மருதூர் மணிகண்ட குருக்கள் கூறுகையில், " ஆகம விதிகளை மீறி இரண்டு குருக்களும் செயல்பட்டது குற்றம். மயூரநாதர் கோயில், அபயாம்பிகை அம்மன் சன்னதி ஆகம விதிமுறைப்படி பூஜையில் ஈடுபடாமல் சுடிதார் அலங்காரம் செய்தது தவறு. இதனை நிவர்த்தி செய்ய ஆதீன நிர்வாகத்தால் ஆகம முறைப்படி பரிகாரம் செய்வோம். மேலும் இதுபோன்று நடக்கா வண்ணம் பணிபுரியும் அனைத்து குருக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இச்சம்பவம் குறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட ராஜு குருக்கள் பிபிசி தமிழிடம் பேசும்போது, " சென்னையில் தனியார் நிர்வாக ஆலயத்தில் பணிபுரிந்த போது அம்பாளுக்கு பலவித அலங்காரங்கள் செய்துள்ளேன். மயூரநாதர் சன்னதியில் பணியில் சேர்ந்த பிறகு என் கனவில் அபயாம்பிகை அம்மன் வந்து கூறியதாலே நான் சுடிதார் அலங்காரம் செய்தேன். இது தவறென்று என்னை பணி நீக்கம் செய்துவிட்டார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். விரைவில் இது தொடர்பான விரிவான விளக்கத்தை ஆதின நிர்வாகத்திற்கு அளிக்க உள்ளேன்" என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :