You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 - 7.5 சதவீதமாக அதிகரிக்கும்
2018- 19 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) 7 - 7.5 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
2017-18 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், 2017-2018 ல் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள், 2018-19ல் பலப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் அடங்கியுள்ள முக்கிய தகவல்கள்:
ஜி.எஸ்.டி வரி அமலுக்கு பிறகான இந்திய பொருளாதாரம்
சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பிறகு இந்திய பொருளாதாரத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மறைமுகமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை அதிக எண்ணிக்கையில் ஜி.எஸ்.டி பதிவாளர்கள் கொண்ட மாநிலங்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி நிலை
சேமிப்பு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை கொண்டுவரவில்லை என்றும், ஆனால் இது முதலீட்டு வளர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம்
இந்திய நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களும் அதனால் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
தீவிர வெப்பநிலையால் மழை பற்றாக்குறை ஏற்பட, அதனால் விவசாய விளைச்சலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இந்தாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் அடங்கியுள்ளது.
இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யும் மாநிலங்கள்
இந்திய வரலாற்றில் முதல்முறையாக சர்வதேச வர்த்தகம், உள் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார செழிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது, மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் 70 சதவீத ஏற்றுமதியை செய்கின்றன.
இந்திய பெற்றோர்களின் ஆசை
இந்திய சமூகம் ஆண் குழந்தை பெற வலுவாக ஆசை காட்டுவதை இந்த ஆய்வறிக்கையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆண் குழந்தை பெறும் வரை தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள அநேக பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :