கோவை: யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 10வது ஆண்டாக கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் வியாழக்கிழமை துவங்கியது.

இந்த முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து கோவில்கள், மடங்களில் இருந்து 33 யானைகள் பங்கேற்றுள்ளன. யானைகள் முகாமிற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1,50,79,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமினை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இம்முகாமில் தினமும் கோவில் யானைகளுக்கு இருவேளை நடைபயிற்சி, பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூர்ணம், ஊட்ட உணவுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

இன்று முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை 48 நாட்கள் இந்த முகாம் நடைபெறவுள்ளது. முன்னதாக முகாமைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "33 யானைகளுக்கு 48 நாட்கள் இந்த சிறப்பு நல்வாழ்வு முகாம் நடத்தப்படுகின்றது. முகாமினை பொது மக்கள் பாதுகாப்பாக வந்து பார்த்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு யானைக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் செலவிடப்படுகின்றது," எனத் தெரிவித்தார்.
மேலும், வனத்துறை யானைகளுக்கு தனியாக முகாம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








