ஐதராபாத்: மொட்டை மாடி மீது கழன்று விழுந்த விமானத்தின் கதவு

ஐதராபாத்தில் விமானம் ஒன்றின் கதவு, அது வானில் பறந்துகொண்டிருந்தபோதே கழன்று ஒரு வீட்டின் மாடியில் விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை.

அது வரை அந்த வீட்டின் மாடியில் வர்ணம் பூசிக்கொண்டிருந்த தொழிலாளி, சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் உணவு உட்கொள்வதற்காக வீட்டின் தரைத் தளத்திற்கு வந்தார் என்று அந்த வீட்டின் உரிமையாளர் கணேஷ் கூறியுள்ளார்.

ஐதராபாத்தின் லாலாகுடா பகுதியில் இயங்கிவரும் தெலங்கானா மாநில அரசின் விமான பயிற்சி நிறுவனத்திற்கு சொந்தமான அந்த சிறிய ரக விமானத்தில் சம்பவத்தின்போது பயிற்சி விமானி உள்பட இருவர் இருந்தனர். உடனடியாக அந்த விமானம் தரை இறக்கப்பட்டது.

அந்தக் கதவு தங்கள் வீட்டின் மீது விழுந்தபோது பெரிய சத்தம் வந்ததாகவும், அண்டை வீட்டாரின் குரலைக் கேட்டு தாங்கள் மேலே வந்ததாகவும் கணேஷின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சுமார் 20 கிலோ எடையும், 3.5 அடி உயரமும் உடைய அந்தக் கதவை காவல் துறையிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

"அந்தப் பகுதியில் தாழ்வான பகுதியில் விமானங்கள் பறப்பது அடிக்கடி நடக்கும் சம்பவம்," என்று பிபிசியிடம் கூறிய லாலாகுடா காவல் துறை ஆய்வாளர் கரண் குமார் சிங், பயிற்சிக்குப் பிறகு அவை மீண்டும் பயிற்சி மையத்தில் உள்ள தளத்திற்கு மீண்டும் திரும்பிவிடும் என்று கூறினார்.

விமானப் போக்குவரத்து இயக்குநர் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :