You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் விவாகரத்துக்கு சமூக வலைத்தளங்களும் காரணமாவதாக கவலை
இலங்கையில் நிகழும் விவாகரத்துகளுக்கு, வீட்டு வன்முறைகளும், கணவன் மனைவியின் கள்ளக் காதல் தொடர்புகளும் பிரதான காரணமாக இருப்பதாக சட்டத்துறை வட்டாரத்தை சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார பிரச்சினை, மது அருந்துதல், வரதட்சனை, மருமகள்-மாமியார் சண்டை போன்ற பிரச்சனைகளும் இதற்கு காரணமாக இருப்பது போன்று சமூக வலைத்தளங்கள், கையடக்க செல்பேசிகள் ஆகியவற்றில் நடைபெறும் கருத்து பரவலாக்கமும் இதற்கு சாதகமாக அமைவதாக கூறுகின்றார் இலங்கை சட்ட உதவிகள் ஆணையகத்தை சேர்ந்த சட்டத்தரணி சஜிவனி அபேயகோன்.
"இதன் மூலம் பிறரோடு தொடர்பு ஏற்படுத்துதல், பிறரை அறிய வருதல், தொடர்புகளை பலப்படுத்தும் வசதி ஆகியவை எளிதாகிவிட்டது. இதனால், ஆண் - பெண் இரு தரப்பும் கள்ளத் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள இவை சாதகமாக அமைகின்றன. அதுவே குடும்ப அமைதிக்கு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது" என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக படங்களை பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் இணைய அரட்டை (chat) மூலம் தவறான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதை தங்களிடம் சட்ட உதவிகளை நாடி வருவது மூலம் அறிய முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கையடக்க செல்பேசிக்கு வருகின்ற, அழைத்து பின்னர் துண்டிக்கப்படும் அழைப்புகள் (மிஸ்ட் கால்) மூலமும் தொடர்புகளை ஏற்படுத்தி இணையத்தில் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன.
சில ஆண்கள் இணையத்தில் ஆபாச படங்களை பார்த்து விட்டு அது போன்று மனைவியுடன் பாலுறவு கொள்ள முற்படுதல் தொடர்பாகவும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
"இலங்கையில் 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 34ஆம் இலக்க குடும்ப வன்முறைகள் தடுப்பு சட்டம் கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்கு எதிராக வன்முறைகளை பிரயோகித்தால் இந்த சட்டம் மூலம் பாதுகாப்பை பெற முடியும்.
இலங்கை சமூகத்தில் குடும்ப பொருளாதார பலம் கணவனிடமே தங்கியிருப்பதால், பெண்கள் துன்பங்களை சகித்துக் கொண்டு பொறுமையுடன் இருப்பதால் முறைப்பாடு செய்ய முன் வருவதில்லை. சிலர் விவாகரத்துக்கு செல்லாமல் பராமரிப்பு பணத்தை பெற்று குடும்பத்தை நடத்திச் செல்கின்றார்கள்.
எப்படி இருப்பினும், சட்டத்தின் முன் கொண்டு வரப்படும் விவாகரத்து வழக்குகளில் கணவன் - மனைவியை பிரிக்காமல் தீர்க்க முயற்சிகள் எடுக்கப்படும் வேளையில், சில சந்தர்ப்பங்களில் அவர்களின் பிரச்சனை உக்கிரமடையும்போது அதனை தீர்க்க முடியாமல் போகின்றது" என்றும் குறிப்பிட்டார் சட்ட உதவிகள் ஆணையகத்தை சேர்ந்த சட்டத்தரணி சஜிவனி அபேயகோன்.
வீட்டு வன்முறைகள் காரணமாக கணவனை பிரிந்து வாழும் பெண்களில் பலரும் மது போதையில் கணவனால் கையாலும் காலாலும் தாங்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்களைதான் முன்வைப்பதாக மற்றுமோர் சட்டத்தரணியான மனித உரிமைகள் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஸ கூறுகின்றார்.
கணவன் அல்லது மனைவியின் கள்ளக் காதல் தொடர்புகள், தவறான நடத்தை மற்றும் பாலியல் பலவீனம் போன்ற காரணங்களும் இலங்கையில் விவாகரத்துக்கு காரணமாக அமைவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
"இலங்கையில் கணவன் தன்னை துன்புறுத்துவதாக கூறி தனது பெற்றோரிடம் அல்லது வேறிடத்திற்கு சென்றுவிடும் பெண், வீட்டு வன்முறைச் சட்டத்தின் கீழ் கணவனுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும். தன்னை கைவிட்டுப் போவதாக குறிப்பிட்டு கணவனுக்கு எதிராக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
வீட்டு வன்முறைகளின்போது பெரும்பாலும் கணவனால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறை காலாலும், கையாலும் மனைவியை அடிப்பது ஆகும்.
மனதில் தோன்றும் சந்தேகம் காரணமாக பிள்ளைகள், உறவுகள் முன்னிலையில் மனைவியால் கணவன் அவமதிக்கப்படும்போது அந்த பெண்களே வீட்டில் கணவன் இருக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றார்கள்.
சில சந்தர்ப்பங்களில் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களோடு தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகம் கொள்கின்றார்கள். இந்த விடயத்தில் மனைவிக்கு அவரது பெற்றோரின் ஒத்துழைப்பும் கிடைக்கின்றது.
வீட்டு வன்முறை என்று கூறும்போது கணவன் மனைவியை கை மற்றும் காலால் அடிப்பது மட்டும்தான் என்று நினைக்கின்றோம். அதேநேரம் மறுபக்கத்தில் பெண்களும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் கணவனை தொடர்ந்து தாக்குகின்ற சம்பங்களும் எமக்கு முன்னால் வைக்கப்படுகின்றன.
பல விவாகரத்துகளுக்கு வீட்டு வன்முறைகளும் கணவன் அல்லது மனைவியின் கள்ளக் காதல் தொடர்புகளும்தான் காரணமாக உள்ளன" என்றும் குறிப்பிட்டார் மனித உரிமைகள் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஸ.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்