You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் கொரியா ஏவுகணை பயிற்சி சோதனை: வட கொரியாவுக்கு பதிலடி?
தனது ஆறாவது அணு ஆயுத சோதனையை வட கொரியா நடத்தியுள்ள சூழலில், அதற்கு பதிலடி தருவதாக வட கொரிய அணு ஆயுத சோதனை தளத்தின் மீது தாக்குதல் நடத்துவது போல தென் கொரியா ஏவுகணை பயிற்சி சோதனை நடத்தியுள்ளது.
இந்த நேரலை பயிற்சி சோதனையில் ஜெட் போர் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகியவை ஏவப்பட்டது.
அமெரிக்கா அல்லது அதன் கூட்டணி நாடுகள் மீது வடகொரியா உண்டாக்கும் அச்சுறுத்தல் மிகப்பெரிய ராணுவ பதிலடி மூலம் சந்திக்கப்படும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்திருந்த நிலையில், தென் கொரியாவின் இந்த ஏவுகணை பயிற்சி சோதனை நடைபெற்றுள்ளது.
முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றின் மீது ஏற்றிச் செல்லக்கூடிய அணு ஆயுதம் ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வட கொரியா அறிவித்தது.
அணு குண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்தது.
அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட போதிலும், ஜப்பான் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணை முயற்சி மிகவும் அரிதான ஒன்றாகும்.
ஐநா அமைப்பு விதித்துள்ள தடைகளையும், சர்வதேச அழுத்தத்தையும் மீறி அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ள வடகொரியா, அமெரிக்க பெருநிலப்பரப்பை சென்றடையக்கூடிய திறன் படைத்த ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
இதற்கிடையே, வட கொரியா தனது ஆறாவது அணு ஆயுத சோதனையை நடத்தியது தொடர்பாக விவாதிக்க இன்று (திங்கள்கிழமை) ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஐ.நா கூட்டத்தில் வட கொரியா மீது கடுமையான தீர்மானங்கள் கொண்டுவர தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாட்டு தலைவர்கள் முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :