`மருத்துவம் கேட்ட மாணவிக்கு மரணத்தை பரிசளித்துள்ளார்கள்`

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடுத்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி அனிதா நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டார். பிளஸ்டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்தும் தமக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்ற காரணத்தால் அவர் இந்த முடிவை எடுத்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தையே மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்திய அனிதாவின் மரணம் பல்வேறு விவாதங்களை அனைவர் மத்தியிலும் எழுப்பியுள்ளது.

முக்கியமாக ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பே தாயை இழந்த பெண், சுமை தூக்கும் தொழிலாளியின் மகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் படித்தவர் என மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்து சாதிக்க துடித்த மாணவியின் மரணத்திற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியையும் சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பியுள்ளனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்களும் பலரும் தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்ட மாணவிக்கு மரணத்தை பரிசளித்துள்ளார்கள் என்ற கடுமையான வாதங்களையும் மக்கள் முன் வைத்துள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் மாணவ அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்கள் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :