You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பால் வளத்துறை அமைச்சர் தற்கொலை செய்துகொள்வாரா?: மு.க.ஸ்டாலின் கேள்வி
பாலில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை நிரூபிக்க முடியாத தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்வாரா என எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
கடந்த மே மாதம் 27ஆம் தேதியன்று ஊடகங்களிடம் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் விற்பனை செய்யும் பால்களில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும் அப்படி கலக்கப்படவில்லை என்று நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் தூக்கில் தொங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், இரண்டு நிறுவனங்களின் பால் பவுடர்களில் மட்டும் காஸ்டிக் சோடா கலக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலினிடம், கலப்படம் செய்ததாக குற்றம்சாட்டப்படும் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லை என்பது குறித்து கேள்வியெழுப்பினர்.
"பாலில் கலப்படம் செய்வதை நிரூபிக்கவில்லையென்றால் தான் ராஜினாமா செய்யப்போவதாகவும் தூக்கில் தொங்குவேன் என்றும் அமைச்சர் கூறினார். ஆனால், இன்றைக்கு வரும் செய்திகளைப் பார்க்கும்போது அவர் ராஜினாமா செய்யப்போகிறாரா, இல்லை தூக்கில் தொங்கப் போகிறாரா என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்" என்றார்.
செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி, நெஸ்லே, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பால் பவுடர்களில் காஸ்டிக் சோடா இருப்பதாக சோதனைகளில் தெரியவந்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்கள் இதனைக் கடுமையாக மறுத்துள்ளன.
இந்த நிறுவனங்களின் மீது எந்த சட்டநடவடிக்கையும் இதுவரை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்