ஆதார் எண்ணுடன் `பான்' எண்ணை இணைப்பது ஜூலை 1 முதல் கட்டாயம்: அரசு உத்தரவு
ஜூலை 1 முதல், ஆதார் எண்ணை, பான் எனப்படும் நிரந்தர வருமானவரிக் கணக்கு எண்ணுடன் இணைப்பதை கட்டாயமாக்கி இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நிதி மசோதா 2017-18-ல் கொண்டு வந்த திருத்தத்தின்படி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது, ஆதார் எண்ணையும் குறிப்பிடுவது கட்டாயமாகிறது. அதாவது, பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்.
இதன் மூலம், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து, வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பது நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.
"ஜூலை 1, 2017 நிலவரப்படி, பான் எண் வைத்திருப்போர் அனைவரும், தங்கள் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும்" என்று வருவாய்த்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, வருமான வரித்துறைச் சட்டத்தில் உரிய மாற்றங்களை அரசு செய்துள்ளது.
ஏற்கெனவே, சுமார் 2.7 கோடி பான் எண் வைத்திருப்போர், தங்கள் எண்களை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில், சுமார் 25 கோடி பேருக்கு பான் எண் இருக்கிறது. ஆனால், 111 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது, பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதைக் கட்டாயமாக்கும் வருமான வரிச்சட்டம் செல்லும் என இந்த மாதத் துவக்கத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
அதனால், ஏற்கெனவே ஆதார் எண் வைத்திருப்போர், ஜூலை 1-ஆம் தேதி முதல் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய பான் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
ஆதார் எண் இல்லாதவர்கள் அல்லது இதுவரை விண்ணப்பிக்காதவர்களைப் பொருத்தவரை, அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் வரையில் இதை கட்டாயமாக்குவதை நிறுத்தி வைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்திகள்:
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












