குதிரை பேரம் இந்தியாவிலேயே இல்லை: தம்பிதுரை
சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது அல்லது அவர்களிடம் குதிரை பேரம் பேசுவது போன்றவை இந்தியாவிலேயே இல்லை என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், loksabha.nic.in
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, சென்னையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை இதனை தெரிவித்தார்
வித்யாசாகர் ராவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக கூறிய தம்பிதுரை, இந்தியாவில் கட்சித்தாவல் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, நாட்டில் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்களால், தனித்து செயல்பட முடியாது என்றும் தெரிவித்த தம்பிதுரை, ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்த இந்த அரசாங்கத்தை கலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றார்.
கூவத்தூர் சொகுசு விடுதியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் நடத்தியதாக குற்றஞ்சாட்டி வெளியிடப்பட்ட வீடியோ ஆதாரங்கள் குறித்தான விசாரணை தேவையில்லாதது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
முன்னதாக நேற்று சனிக்கிழமை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த திமுகவின் செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசுகையில், "குதிரை பேரத்தால்தான் இந்த அரசு வெற்றிபெற்றிருக்கிறது. ஆகவே இந்த அரசைக் கலைத்துவிட்டு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்" என்று கூறினார்.
அத்தோடு ஆளுநரிடம் அவர் அளித்திருந்த மனுவில், வருவாய் புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை ஆகியவை சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட குதிரை பேரம், தங்க கொள்முதல் குறித்து விசாரிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.
பிபிசியின் பிற செய்திள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












