You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாமதமாக விமான நிலையம் வந்த ஆந்திரா எம்.பி திட்டியதால் சர்ச்சை
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திவாகர் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு தாமதமாக வந்துபோது, அவர் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டதும், விமானசேவை அதிகாரிகளை மோசமாகப் பேசி, கணினி அச்சு இயந்திரந்தை கீழே போட்டு உடைத்ததால், பல உள்நாட்டுவிமானசேவை நிறுவனங்கள் அவரின் பயணத்திற்கு தடை விதித்துள்ளன.
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த திவாகர் ரெட்டி விமான நிலைய அதிகாரிகளிடம் மோசமாக நடந்துகொண்டதாக கூறி ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ ஆகிய விமான சேவை நிறுவனங்கள் தங்களது விமானங்களில் பயணம் செய்ய தடை விதித்துள்ளதாக கூறியுள்ளன.
விசாகபட்டினம் விமான நிலையத்தில் இருந்து காலை 8:10 மணிக்கு ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய திவாகர் ரெட்டி, 20 நிமிடத்திற்கும் மேலாக தாமதமாக வந்ததாகவும், விமான நிலைய அதிகாரிகளை அவர் திட்டி, அச்சு இயந்திரத்தை உடைத்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தை அடுத்து அறிக்கை வெளியிட்ட இண்டிகோ நிறுவனம், தங்களது ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை பாதிக்கும் எந்தவொரு செயலையும் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தது.
''காலதாமதமாக வந்த திவாகர் ரெட்டி எங்கள் ஊழியர்களிடம் கோபத்தோடு நடந்துகொண்டார். ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்குதான் நாங்கள் முக்கியத்துவம் அளிப்போம்,'' என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தனது அதிகாரபூர்வ டிவிட்டர் வலைத்தளத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் டிவிட்டர் செய்திக்கு பதில் அளித்துள்ளவர்களில் சிலர், சாதாரண நபர்கள்தான் தண்டனைக்கு ஆளாகிறார்கள் என்றும் நடந்த சம்பவங்களை சிசிடிவி காட்சிகள் மிக தெளிவாக காட்டுகின்றன என்றும் திவாகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக மார்ச் மாதம் சிவசேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தபோது, விமான ஊழியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பின்னர் அவரின் விமானத்தில் அனுமதிக்கப்போவதில்லை என்று விமான நிறுவனங்கள் அறிவித்தன.
ரவீந்திர கெய்க்வாட் மன்னிப்பு கோரிய பிறகு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்