You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் , அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
டிடிவி. தினகரனுக்கும், இதே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவுக்கும் ஜாமீன் அளிப்பதாக டெல்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இருவரும் 5 லட்சம் ரூபாய் செலுத்தி, சொந்த ஜாமீனில் செல்வதற்கு நீதிபதி பூனம் சவுத்ரி அனுமதி அளித்துள்ளார்.
டிடிவி. தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோர் ஜாமீனில் வெளியே சென்று சாட்சியங்களை கலைக்கக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை இருவருக்கும் ஜாமீன் வழங்கும்போது நீதிபதி விதித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதியன்று, இரட்டை இல்லை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தினகரனுக்கு உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.
தொடர்பான செய்திகள்:
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணியினருமே அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரின.
கடந்த 12-ஆம் தேதி நடைபெற இருந்த இடைத் தேர்தல், பெருமளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், கடந்த வாரம் சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் ஒருவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தருவதாகவும், அதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தினகரனிடம் பல கோடி ரூபாய் அவர் பெற்றிருப்பதாக தகவல் வெளியானது. அவரிடமிருந்து ரூ.1.3 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்தனர். அதன்பேரில், தினகரன் டெல்லி வந்து விசாரணையை சந்தித்து வந்தார்.
சுகேஷ் சந்திரா, அவரது உதவியாளர் ஜனார்த்தனா, நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக, நான்கு நாட்களாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார், அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் டிடிவி தினகரனை கைது செய்தனர்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்