You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்
இந்தியாவின் கேரள மாநிலத்தில், பல ஆண்டுகளாக இந்துமத போதகர் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறி, அவரது ஆணுறுப்பை வெட்டினார் ஆத்திரமடைந்த 23 வயது இளம் பெண்.
குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சந்தேக நபரின் பெயர் கங்கேஷானந்தா தீர்த்தபடா என்றும், அவர் உடல்நலமின்றி அவதிப்பட்டு வரும் அப்பெண்ணின் தந்தைக்கு பிரார்த்தனை சடங்குகளை செய்ய அடிக்கடி வீட்டிற்கு வருவார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தில் ஏற்பட்டுள்ள துயரங்களிலிருந்து தன்னுடைய பூஜையின் மூலம் இந்த புனித மனிதர் தங்களை காப்பாற்றுவார் என்று அப்பெண்ணின் தாயார் நம்பியிருந்தார்.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த தீர்த்தபடா முயற்சித்த போது அப்பெண் கத்தி ஒன்றை எடுத்து தாக்கியுள்ளார். அதன்பின், போலீஸாருக்கும் அவரே தகவல் கொடுத்துவிட்டார்.
பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்ததாக கூறப்படும் நபர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
''கொல்லத்தை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடுஇரவு 12.39 மணிக்கு சனிக்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ஆணுறுப்பு 90 சதம் வெட்டப்பட்டு பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டிருந்தது. அதை மீண்டும் பழையபடி தைப்பதற்கான எவ்விதமான சாத்தியக்கூறுகளும் இல்லை'' என்று மருத்துவமனை வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
''மருத்துவமனையில் இருந்த சிறுநீரக நிபுணர்களை கொண்டு ரத்த போக்கை நிறுத்துவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சிறுநீர் கழிக்க வழிவகை செய்யப்பட்டது.''
பல ஆண்டுகளாக அந்த இளம்பெண்ணின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் அவதிப்பட்டு வந்துள்ளார் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு போலீஸார் துணை கமிஷனர் அருள் பி கிருஷ்ணா கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்புக்கு உள்ளான பெண் தான் அனுபவித்து வந்த கொடுமைகளை தனது தாயிடம் கூறியுள்ளார். அதனால், புகார் கூற முன்வராததற்காக இளம்பெண்ணின் தாய் மீதும் வழக்கு பதியப்படலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால், பாதிப்புகளுக்கு உள்ளான பெண், எவ்விதமான குற்றவியல் வழக்குகளையும் எதிர்கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிப்புக்குள்ளான பெண்ணின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆணுறுப்பை வெட்டியது என்பது ஓர் அசாத்தியமான மற்றும் தைரியமான செயல் என்று கூறியுள்ளார்.
2012 ஆம் அண்டு இந்திய தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் நடைபெற்ற கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவத்திற்குபின் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் மீளாய்வு இந்தியாவில் அதிகரித்துள்ளது.
ஆர்ப்பாட்டகாரர்கள் பெரும்பாலும் பாலியல் வல்லுறவுக்கு கட்டாயப்படுத்திய நபரை தூக்கிலிடுங்கள் என்று கோரிக்கை வைப்பார்கள். குற்றச்செயல்களுக்காக வழங்கப்படும் உச்சபட்ச தண்டனையாகும்.
ஆனால், நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்