You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர்கள் அகற்றம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் பேனர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு மீண்டும் ஜெயலலிதாவின் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்தில் இரு புறங்களிலும் முன்பு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி அவர் மறைந்த பிறகு, அவரது தோழியான வி. கே. சசிகலா பொதுச்செயலாளராகப் பதவியேற்றார்.
அதற்குப் பிறகு அந்த பேனர்கள் அகற்றப்பட்டு, ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து இருப்பது போன்ற படங்கள் அங்கு வைக்கப்பட்டன.
அ.தி.மு.க. தற்போது இரு அணிகளாகப் பிரிந்துகிடக்கும் நிலையில், அவை இணைவது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனால், பேச்சுவார்தையில் பெரிய முன்னேற்றமின்றி இழுபறி நிலையே நீடித்து வருகிறது. சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியைவிட்டே நீக்க வேண்டுமென எதிர்த்தரப்பான ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கோரிவருகிறது.
இந்நிலையில், நேற்று ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் விடுத்த அறிக்கையில், கட்சி அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர்களை அகற்ற வேண்டுமெனக் கோரினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று காலையில் சசிகலாவின் பேனர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக ஜெயலலிதாவின் பேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்