விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டெல்லி தமிழ் இளைஞர்கள் பேரணி
டெல்லியில் கடந்த 28 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, டெல்லி தமிழ் இளைஞர்கள் இன்று பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

ராம்லீலா மைதானத்தில் துவங்கிய இந்தப் பேரணி, சுமார் 3 கி.மீ. தூரம் முக்கிய சாலைகள் வழியாக பயணித்து, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் ஜந்தர் மந்தர் பகுதியை அடைந்தது.
இந்தப் பேரணியில், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள் உள்பட டெல்லி இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் குரல்களை அரசு செவிமடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஜந்தர் மந்தர் பகுதியை வந்தடைந்த பிறகு, விவசாயிகளுக்கு ஆதரவாக சிறிது நேரம் அவர்கள் முழக்கமிட்டார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆரம்பத்தில் இருந்து டெல்லி தமிழ் இளைஞர்கள், உணவு, மருத்துவப் பரிசோதனை வசதி உள்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து தார்மீக ஆதரவு அளித்து வருகின்றனர்.
நக்மா ஆதரவு
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலரும் முன்னாள் நடிகையுமான நக்மா, ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதுவும் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












