You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உண்ணாவிரத போராட்டம்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டமன்றத்திலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் அதன் பெரும்பான்மையை நிரூபிக்க நேற்று (சனிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தி.மு.கவின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டும் என்று சபாநாயகர் தனபாலுக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனால், சபாநாயகர் தனபால் ஸ்டாலினின் கோரிக்கையை நிராகரித்தார்.
அதனைத்தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக சபை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றவும் சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பிற்பகல் மீண்டும் சபை கூடிய நிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிந்த தி.மு.க உறுப்பினர்களை சபை காவலர்கள் வெளியேற்றினார்கள்.
எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினும் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார்.
சட்டை கிழிந்த நிலையில் எம்.எல்.ஏக்களுடன் பேரவையிலிருந்து வெளியேறிய ஸ்டாலின் சபாநாயகர் தனபால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாலை 6 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இச்சூழலில், சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 22 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரதத்தில் ஒத்தக் கருத்துடைய அமைப்புகளும் மற்றும் பொது மக்களும் பெருந்திரளாக பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மதியம் ஒரு மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தி.மு.கவை வெளியேற்றிவிட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என்று கூறி ஆளுநரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளதாகவும், விரைவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து இது குறித்து முறையிடுவோம் என்றும் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்