நாளை புதிய போராட்டம்: சசிகலா அறிவிப்பு

பட மூலாதாரம், ARUN SANKAR
அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், தன்னை பதவியேற்க அழைக்காமல் காலதாமதம் செய்யப்படுவதாகவும், நாளை வேறு விதத்தில் போராட இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலர் சசிகலா எச்சரித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை, கூவத்தூர் சென்று, தனியார் விடுதியில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய சசிகலா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"இன்று வரை பொறுத்திருந்தோம். நாளை வேறுவிதத்தில் போராட உள்ளோம்," என்றார்.
ஆனால், என்ன வகையான போராட்டம் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
மேலும், தங்களை ஆட்சி அமைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது பற்றிக் குறிப்பிட்ட சசிகலா, "நேரம் இழுப்பதற்காக எடுத்துக் கொண்டதைப் பார்த்தால், எங்கள் கட்சியில் பிளவுகள் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இது நடக்கிறதோ என்று இன்று புரிகிறது," என்றார்.
இந்தப் பிரச்சனையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "பொறுத்திருந்து பாருங்கள்," என்றார் சசிகலா.
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடனான சந்திப்புக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லோரையும் சந்தித்தேன். அதிமுக குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த மன திருப்திதான் எனக்கு இருந்தது," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












