You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் பெப்சி-கோக் விற்பனை நிறுத்தப்படும்: வணிகர் சங்க பேரவை
தமிழகத்தில் வரும் ஜனவரி 26ம் தேதி முதல் பெரும்பாலான வணிகர்கள் அமெரிக்க குளிர்பானமான பெப்சி, கொக்கோ கோலா போன்றவற்றை விற்கமாட்டார்கள் என தமிழ் நாடு வணிகர் சங்கங்களில் பேரவை அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு வணிகர்களின் பங்களிப்பாக பெப்சி, கொக்கோ கோலா எதிர்ப்பு இருக்கும் என தமிழ் நாடு வணிகர் சங்கங்களில் பேரவை தலைவரான த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், ''இளைஞர்கள் பெரும் அளவில் திரண்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராடி வருகிறார்கள். கடந்த ஒரு வார காலமாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு எங்கள் பங்காக அமெரிக்கா குளிர்பான நிறுவன தயாரிப்பான பெப்சி, கொக்கோ கோலா மற்றும் அந்த நிறுவனங்களின் எல்லா வகையான குளிர் பானங்களை நாங்கள் விற்க மாட்டோம் என எங்களது அமைப்பைச் சேர்ந்த சுமார் 60 லட்சம் வணிகர்கள் ஆதரவு அளித்துள்ளனர்,'' என்றார்.
''ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும். பெப்சி, கோக் தயாரிப்புகளும் அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்தவை தான். இந்த குளிர் பானங்கள் நச்சுத்தமை வாய்ந்தவை என தில்லியில் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர் சுனிதா நாராயணன் அறிவியல் பூர்வமாக சொன்ன போதும் அதை மத்திய, மாநில அரசாங்கங்கள் தடை விதிக்கவில்லை,'' என்றார்.
அவர் மேலும், ''நடிகர், நடிகைகள் குளிர்பான விளம்பரங்களில் நடித்து போன்றவை குளிர்பான விற்பனையை அதிகரித்தது. தற்போது மக்களுக்கு நாட்டு காளைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையும், வெளிநாட்டு குளிர்பானங்களை நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வும் வந்துள்ளதை போராட்டத்தில் பார்க்க முடிந்தது,'' என்று விவரித்தார்.
இதன் மூலம் வியாபாரிகளுக்கு ஏற்படும் நஷ்டம் பற்றி குறிப்பிடும் போது, '' வணிகர்கள் குளிர்பானங்களை அந்த நிறுவனங்களிடம் திருப்பி கொடுத்து விடுவார்கள். இந்திய குளிர்பானங்களை அதிக அளவில் விற்பனை செய்வார்கள்,'' என்றார்.