உடல்நலன் குறித்த வெளிப்படையான அறிவிப்பு: சுஷ்மாவின் முன்னுதாரணம்
தங்கள் உடல்நலன் குறித்து இந்திய அரசியல்வாதிகள் ரகசியம் காத்து வரும் பொதுவான நடைமுறையிலிருந்து மாறி இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தன் உடல்நலன் குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இதில் இருக்கும் வெளிப்படையான வித்தியாசம் நன்றாக புலப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான உடல் நிலை என்னவென்று அதிகாரபூர்வமாக இன்னமும் தெரியவில்லை. ஆனால், இந்திய வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் தற்போது ஏன் மருத்துவமனையில் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்று காலையில் தனது டிவிட்டர் வலைதளத்தில் சுஷ்மா தெரிவிக்கையில், ''சிறுநீரக செயலிழப்பின் காரணமாக சிகிச்சைக்காக நான் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ளேன். தற்போது நான் டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளேன். சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக சில மருத்துவ சோதனைகள் செய்துள்ளேன். கிருஷ்ண பகவானின் ஆசிர்வாதம் எனக்குண்டு'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Twitter
பொதுவாக, இந்திய அரசியலில் இல்லாத வெளிப்படைத்தன்மை, சுஷ்மா ஸ்வராஜிடம் இருப்பது சமூக வலைதளங்களில் ஒரு புயலை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உண்மையான உடல் நிலை குறித்து இந்நாட்டு மக்களுக்கு தெரியாதது போலவே, என்னவென்று தெரியாத உடல்நலக்குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, தனது உடல்நலக்குறைப்பாட்டிலிருந்து தேறி விட்டார் என்று கடந்த வாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை குழுவின் தலைவர் மருத்துவர். பிரதாப் சி. ரெட்டி அறிவிக்கும் வரை அவரது உடல் நலன் பற்றியும் யாருக்கும் தெரியாது.
முதல் முறையாக ஜெயலலிதாவின் தொற்று கட்டுக்குள் இருப்பதாகவும், அவர் சாதாரண உணவை எடுத்துக் கொள்வதாகவும் ரெட்டி தெரிவித்தார். ஆனால், ஜெயலலிதா ஏன் நீண்ட காலம் மருத்துவமனையில் இருந்தார் என்பதற்கான விளக்கமில்லை.
ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து

பட மூலாதாரம், AP
உடலில் நீர்க்குறைவு காரணமாக, கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலவர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தான் முதலில் ஜெயலலிதாவுக்கு சிறுநீரகம் தொடர்பான கோளாறு இருக்கலாம் என்று தனது டிவிட்டரில் செய்தி வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் கூறப்பட்டதாவது, ''எனது அறிவுரையை ஏற்று ஜெயலலிதா உடனடியாக ஒரு விமானத்தில் சிங்கப்பூர் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் அரசியல் ரீதியான எதிராளிகளாக இருக்கலாம். ஆனால், அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்தார்.
மற்றொரு டிவிட்டர் செய்தியில், நெப்ரிடிஸ் எனப்படும் சிறுநீரக கோளாறுக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் வழங்கிய மருத்துவ அறிவுரையின்படியேதான் அறிவுரை வழங்கியதாக சுவாமி தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP/Getty
ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனைகள்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்திலிருந்து பல விதமான வதந்திகள் தமிழகத்தில் உலவி வந்தன.
ஜெயலலிதாவை தீவிரமாக பின்பற்றுபவர்கள் இந்த வதந்திகளால் கலக்கமடைந்து மருத்துவமனைக்கு வெளியே பிரார்த்தனை நடத்தினர். வழிபாட்டு தலங்களில் வேண்டுதல் ஏற்பது, மண் சோறு உண்பது மற்றும் வேண்டுதலுக்காக தங்கள் உடலில் கூரிய ஊசிகள் மற்றும் பிற பொருட்களால் துளையிடுவது போன்ற பல செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
முன்னுதாரணமாக விளங்கிய சுஷ்மா
இது குறித்து பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஓஆர் எஃப்) அமைப்பின் பிராந்திய இயக்குநரான என் சத்தியமூர்த்தி பிபிசி இந்தி செய்தி சேவை பிரிவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ''ஜெயலலிதா என்றில்லை, பதவியில் இருக்கும் போது தனது உடல் நலக்குறைபாடு குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தவிர வேறு யாரும் வெளிப்படையாக பேசியதில்லை''.
''பதவியில் இருக்கும் போது தான் இருதய பைபாஸ் சிகிச்சை மேற்கொண்ட போது அதனை வெளிப்படையாக அறிவித்தவர் மன்மோகன் சிங்''.
''தற்போது சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ள இந்த வெளிப்படையான அறிக்கையும் இவ்வாறான தைரியமான ஒரு அறிக்கையாகும்'' என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், தற்காலத்தில் அரசியல்வாதிகள் தங்கள் உடல்நிலை குறித்து ரகசியம் காக்கும் போது, தனது உடல் நலன் குறித்து சுஷ்மா வெளிப்படையான அறிக்கை விடுத்துள்ளார்.
இதனால் அவர் உடல்நலன் தேறும் வரை, ஒரு புதிய வெளியுறவு அமைச்சர் கூட நியமிக்கப்படலாம். நமக்கு அது குறித்து இன்னமும் தெரியாது'' என்று கூறினார்.
தொடர்ந்து தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்து வரும் போது, அவர் வகித்து வந்த பொறுப்புகள் தமிழக நிதியமைச்சர் ஓ. பின்னேர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.












