You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரிஷி சூனக், கமலா ஹாரிஸ் மட்டுமல்ல.. மற்ற முக்கிய நாடுகளின் தலைமை பதவியிலும் இந்திய வம்சாவளி தலைவர்கள்
பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷி சூனக் பதவியேற்றுள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது ஒரு வரலாற்றுபூர்வ நிகழ்வு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருணித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரிஷி சூனக்குக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இரு நாடுகளின் பொதுவான நலன்களுக்காக எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.
இந்திய சமூக ஊடகங்களில் ரிஷி சூனக்கின் இந்த சாதனைக்கு பல தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.
1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்திய தலைவர்களை 'திறமை குறைந்தவர்கள்' என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார். இப்போது, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டனின் பிரதமராக வருவதைக் காண்கிறோம். வாழ்க்கை அழகானது" என்று ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.
இந்தப் பின்னணியில், உலகின் பல நாடுகளில் முன்னணித் தலைவர்களாகத் தொடரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்ற தலைவர்களைப் பற்றி பலரும் பேசுகிறார்கள்.
தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஆஃப்ரிக்கா மற்றும் ஆசியாவின் பல நாடுகளில் முக்கிய பதவிகளில் உள்ளனர். பிரிட்டனுடன் சேர்த்து மற்ற ஏழு நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் இந்திய வம்சாவளி தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா
அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவர். அவர் போர்ச்சுகல் நாட்டின் பிரதமர்.அன்டோனியாவின் தந்தை ஆர்லாண்டோ கோஸ்டா ஒரு கவிஞர். காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார். போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட புகழ்பெற்ற புத்தகம் 'Shine of Anger'.
அவரது தாத்தாவின் பெயர் லூயிஸ் அபோன்சோ மரியா டி கோஸ்டா. லூயிஸ் கோவாவில் வசித்து வந்தார். அன்டோனியா கோஸ்டா மொசாம்பிக்கில் பிறந்தார். இருப்பினும், அவரது உறவினர்கள் கோவாவில் உள்ள மார்கோவாவிற்கு அருகிலுள்ள ருவா அபேட் ஃபரியா கிராமத்துடன் தொடர்புடையவர்கள்.
அன்டோனியோ கோஸ்டா ஒருமுறை இந்திய அடையாளத்தைப் பற்றி பேசினார். "என்னுடைய தோல் நிறம் என்னை எதையும் செய்வதிலிருந்து ஒருபோதும் தடுக்கவில்லை. எனது தோலின் நிறத்தை சாதாரணமானதாகவே கருதுகிறேன்," என்று அவர் கூறினார்.
தவிர, இந்திய ஓசிஐ (இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள்) கார்டு வைத்திருப்பவர்களில் கோஸ்டாவும் ஒருவர். இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு 2017ஆம் ஆண்டில் ஓசிஐ அட்டையை வழங்கினார்.
மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத்
மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதியும் கூட. அவர் இந்தியாவின் பிகாருடன் தொடர்புடையவர்.பிரவிந்த் ஜெகநாத்தின் தந்தை அனிருத் ஜெகநாத் மொரீஷியஸின் வலிமையான அரசியல்வாதிகளில் ஒருவர். மொரிஷியஸ் நாட்டின் அதிபராகவும் பிரதமராகவும் இருந்தவர் அனிருத் ஜெகநாத்.
தற்போது மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக இருக்கும் பிரவிந்த் ஜெகநாத், தனது தந்தை அனிருத்தின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்காக உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கு வந்திருந்தார். இது தவிர, பல சந்தர்ப்பங்களில் அவர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.
மொரீஷியஸின் தற்போதைய அதிபராக இருக்கும் பிருத்விராஜ் சிங் ரூபானும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான்.
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் முன்னோர்களும் இந்தியாவில்தான் வேரூன்றியவர்கள். இவரது தந்தை ஒரு இந்தியர். தாயார் மலையாளி. சிங்கப்பூரின் மக்கள்தொகையில் மலையாளிகள் 15 சதவீதத்தினர் உள்ளனர்.
சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலிமா யாக்கோப் தேர்வு செய்யப்பட்டு வரலாறு படைத்தார். இதற்கு முன், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஹலிமா பதவி வகித்தார். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகரும் இவரே.
சுரினாம் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி
சந்திரிகா பிரசாத் சந்தோகி, லத்தீன் அமெரிக்க நாடான சுரினாமின் அதிபர். இந்தியாவுடன் அவருக்கும் தொடர்பு உள்ளது. இவர் இந்தோ-சூரினாமிஸ் இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் சான் சந்தோகி என்று அழைக்கப்படுகிறார்.
சந்திரிகா பிரசாத் சந்தோகி சமஸ்கிருத மொழியில் அதிபராக பதவியேற்றதாக சில தகவல்கள் கூறுகின்றன.
கயானாவின் அதிபர் இர்பான் அலி
கரீபியன் நாடான கயானாவின் அதிபரான இர்பான் அலிக்கும் இந்தியாவில் இருந்து முன்னோர்கள் உள்ளனர்.
இர்ஃபான் 1980இல் இந்தோ-கயானிய குடும்பத்தில் பிறந்தார்.
செஷெல்ஸ் அதிபர் வேவல் ராமகலவன்
செஷல்ஸ் அதிபர் வாவெல் ராமகலவனும் இந்திய வம்சாவளி தலைவர் ஆவார். இவரது முன்னோர்கள் பிகாரைச் சேர்ந்தவர்கள். இவரது தந்தை ஒரு கொல்லர். அம்மா ஒரு ஆசிரியர்.
2021இல், நரேந்திர மோதி அவரைப் பற்றி பேசியபோது, அவரை 'இந்தியாவின் மகன்' என்று அழைத்தார். "வாவேல் ராமகலவனின் முன்னோர்கள் பிகாரில் உள்ள கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள். இன்று, அவரது சாதனைகளால் அவரது கிராம மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொள்கிறது" என்று மோதி கூறினார்.
அமெரிக்காவில் வரலாறு படைத்த கமலா ஹாரிஸ்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களில் ஒருவர்.
2021ஆம் ஆண்டில், அவர் 85 நிமிடங்கள் அமெரிக்காவின் தற்காலிக அதிபராக பணியாற்றினார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் அதிபராக பதவி வகித்த முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்தார். அதற்கு முன், 250 ஆண்டுகள் பழமையான அமெரிக்க ஜனநாயகத்தில் முதல் பெண், முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய-அமெரிக்க பெண் துணை அதிபராக அவர் வரலாறு படைத்தார்.
இந்தியாவுடனான தனது தொடர்பு குறித்து கமலா ஹாரிஸ் வெளிப்படையாக கூறியுள்ளார். 2018இல், 'நாங்கள் சொன்ன உண்மை' என்ற அவரது சுயசரிதை வெளியிடப்பட்டது.
"மக்கள் என் பெயரை நிறுத்தி இரண்டாக அழைக்கிறார்கள். அவர்கள் 'கம-லா' என்று கூறுகிறார்கள்" என்று அவர் தனது சுயசரிதையில் எழுதினார்.
அந்த சந்தர்ப்பத்தில் கலிபோர்னியா செனட்டர் ஆக இருந்த கமலா ஹாரிஸ் தனது பெயரின் அர்த்தத்தை பொதுமக்களுக்கு விளக்கினார்.
"என் பெயருக்கு தாமரை மலர் என்று அர்த்தம். இந்த மலர் இந்திய கலாசாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தாமரை செடி நீருக்கடியில் உள்ளது. அதன் பூ நீரின் மேற்பரப்பில் பூக்கும். தாமரை செடியின் விரல்கள் நதியோடு இறுகப் பின்னிப் பிணைந்துள்ளன'' என்று தன் பெயரைப் பற்றி விளக்கினார் கமலா.
கமலாவின் தாய் இந்தியாவை சேர்ந்தவர். அப்பா ஜமைக்காவைச் சேர்ந்தவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்